search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையுடன் சுற்றி திரியும் மேலும் 3 காட்டு யானைகள்
    X

    மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையுடன் சுற்றி திரியும் மேலும் 3 காட்டு யானைகள்

    • இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    சமயபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் இந்த பகுதியில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல பாகுபலி யானை சமயபுரம் ஊருக்குள் புகுந்தது. ஆனால் இதுவரை ஒற்றையாக வந்த பாகுபலி யானை தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 காட்டு யானைகளுடன் வந்தது.

    அதிகாலை வேளையில் சமயபுரம் பகுதிக்குள் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தன.

    இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி யானையின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், பாகுபலி யானை இதுவரை பொதுமக்களை தாக்கியது இல்லை என்றாலும் தற்போது பாகுபலியுடன் வேறு சில யானைகளும் வருவதால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×