என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அபராத தொகையை கட்டாதவர்களின்  வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை- மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
    X

    நெல்லை சந்திப்பில் அழைப்பு மையத்தை திறந்து வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆய்வு செய்த காட்சி.

    அபராத தொகையை கட்டாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை- மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

    • சாலை விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • அபராதங்களை ஒரு வாரத்திற்குள் கட்டுமாறு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது சமீபகாலமாக அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    23 ஆயிரம் வழக்குகள்

    அந்த வகையில் மாநகர காவல் பகுதிக்குட்பட்ட மேற்கு மண்டலம், கிழக்கு மண்டல பகுதிகளில் சாலை விதிகளை மீறியதாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    ஆனால் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அறியாமல் உள்ளனர். இதனால் ஏராளமான வாகன ஓட்டிகள் அபராத தொகையை கட்டவில்லை.

    அழைப்பு மையங்கள்

    இதைத்தொடர்ந்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தெரியப் படுத்தும் வகையில், மேற்கு மண்டல பகுதிக்கு சந்திப்பு போலீஸ் நிலையத்திலும், கிழக்கு மண்டல பகுதிக்கு சமாதானபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு அலுவலகத்திலும் பிரத்யேக மாக அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அலுவலகங்களில் 24 மணி நேரமும் ஒரு காவலர் பணியில் இருப்பார். அவர் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு விபரங்களை போன் மூலம் தெரிவிப்பார்.

    இந்த அலுவலகங்களை இன்று மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வாகனங்கள் பறிமுதல்

    போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சமீப காலத்தில் விதி மீறியதாக பதிவு செய்யப்பட்ட 23 ஆயிரம் வழக்குகளில் சுமார் 15 ஆயிரம் வழக்குகளுக்குரிய அபராதங்கள் கட்டப்பட வில்லை. இன்று திறக்கப் பட்டுள்ள அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதங்களை ஒரு வாரத்திற்குள் கட்டுமாறு எச்சரிக்கப்படும்.

    அதன் பிறகும் அபராத தொகை கட்டாதவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு பெற்று வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருநங்கைகள்

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை, புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பகுதிகளில் திருநங்கைகள் தொல்லை இருப்பதாக புகார்கள் வந்தது.

    இதுதொடர்பாக நேற்று திருநங்கைகளை அழைத்து பேசி சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்துள்ளோம். அதே நேரத்தில் அப்பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் தலைமை இடத்து துணை கமிஷனர் அனிதா, மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவண குமார், உதவி கமிஷனர்கள் மணிமாறன், சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, செல்லத்துரை, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் உலகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×