search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டி மலை ரெயிலில் குவியும் வெளிமாநில பயணிகள்
    X

    ஊட்டி மலை ரெயிலில் குவியும் வெளிமாநில பயணிகள்

    • மலை ரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகளின் அதிகளவில் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும் எண்ணற்றோர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்துக்கொண்டு உள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நிலவரப்படி ஜூன் 15-ந்தேதிவரை முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் 6 ஆயிரத்துக்கும் மேல் நீண்டு வருகிறது.

    இதற்கிடையே நீலகிரியில் பலத்த மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே பாறை உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக செல்லும் மலைரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இருப்பினும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தற்போது 5 பெட்டியுடன் கூடிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 10-ந்தேதிவரை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் குன்னூர் ஊட்டி இடையேயான மலை ரெயிலில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரியில் கோடை சீசன் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் மலை ரெயில் போக்குவரத்து நிலையங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளன.

    Next Story
    ×