என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து  நதிகள் மாசுபடுவதை தடுக்க முன்வர வேண்டும்  -ஓசூரில் அகில பாரத துறவிகள்  சங்க இணை செயலாளர் பேட்டி
    X

    காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்தபோது எடுத்த படம்.

    பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நதிகள் மாசுபடுவதை தடுக்க முன்வர வேண்டும் -ஓசூரில் அகில பாரத துறவிகள் சங்க இணை செயலாளர் பேட்டி

    • நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும்.
    • நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    ஓசூர்,

    அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில், நதி நீர் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சங்கத்தின் இணை செயலாளரும், ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளருமான சிவராமானந்தா சுவாமிகள் தலைமையில் இந்த ரத யாத்திரையானது கடந்த 20-ந் தேதி, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு இடங்களை கடந்து நேற்று ஓசூர் வந்த ரதயாத்திரைக்கு, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், நதிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சண்முகவேல், செயலாளர் ஒய்.வி.எஸ். ரெட்டி, ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் ஓசூர் நியூ அட்கோ பகுதி மற்றும் ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், தனியார் மண்டபத்திலும் காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், சிவராமானந்தா சுவாமிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனிதனுடைய வாழ்க்கையில் நீர் மிகவும் முக்கியமானது. அந்த நீருக்கு ஆதாரமாக விளங்குவது நதிகளாகும். இந்த நீர் ஆதாரங்களான நதிகளை தேவதைகளாக வணங்க வேண்டும். நதிகள், தற்போது குப்பை கொட்டும் மையமாக மாறி, மாசடைந்து வருகிறது.

    இந்த விழிப்புணர்வு யாத்திரையின் நோக்கமே பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நதிகளில் மாசு படுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதுதான். மேலும் வருங்கால சந்ததியினருக்கு இந்த விழிப்புணர்வு வாயிலாக தூய்மையான குடிநீரை வழங்குவதுடன், மாசில்லா நீரின் மூலம் விவசாயம் தழைக்கவும் ஏதுவாக இருக்கும் இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    மேலும் இதில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசு, நதிநீர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சரவணன்,சுகுமாரன், நரசிம்மன் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர் விஷ்ணுகுமார், தேவராஜ், பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×