search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகத்தில் 6 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
    X

    தமிழகத்தில் 6 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

    • ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • 16-ந்தேதி வரை பலத்த மழைகு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை விலகி ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.

    இதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதுதவிர லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் நில வும் காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை அடுத்த சில நாட்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கின்றது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 6 நாட்களுக்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்ம புரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் 16-ந்தேதி வரை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையில் அதி காலை 1.30 மணியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

    எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

    ஆனாலும் மழைநீர் சாலைகளில் இருந்து உடனடியாக வடிந்தது. சுரங்கப் பாதையிலும் பெரிய அளவில் மழைநீர் தேங்காததால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் வடிந்தது. தொடர்ந்து காலையிலும் ஒரு சில இடங்களில் லேசாக மழை தூறியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×