என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல்-மதுரை இடையே ஜூலை 10-ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடக்கம்
- கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளன.
- திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-மதுரை இடையே கொரோனா கட்டுப்பாடுகளால் ரெயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.மேலும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளன.
அத்துடன் பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு இந்த ரெயிலால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமப்புற பயணிகள் பயனடைந்து வந்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தினசரி பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பாசஞ்சர் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எனவே மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.அதனை தொடர்ந்து திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரெயில் (வ.எண்.06609) திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு காலை 9.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06610) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயில்கள், அம்பாத்துறை, கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், கூடல்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.






