என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
- தேவாலயத்தில் விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததாக மனுதாரர் தகவல்
- முறைப்படி திருமணம் நடந்து விட்டால், அது செல்லத்தக்கது தான்.
சென்னை:
கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனக்கு கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. என் விருப்பம் இல்லாமல் நடந்துள்ள இந்த திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை தலைவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிறிஸ்துவ தேவாலயத்தில் தனது விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தாகவும், இதை பதிவு செய்யக்கூடாது என்று மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், முறைப்படி திருமணம் நடந்துவிட்டால், அதை பதிவு செய்யாவிட்டாலும், அந்த திருமணம் செல்லத்தக்கது தான்.
விருப்பம் இல்லாமல் நடந்த திருமணத்தை, பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது. சம்பிரதாயப்படி திருமணம் நடந்து விட்டால், அதை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துதான் ரத்து செய்ய முடியும். மாறாக திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.






