search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு விழா
    X

    கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு விழா

    • வைகாசி விசாக பெருந் திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • கொடிமரக் கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது

    கன்னியாகுமரி, மே.10-

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 23-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடிமரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 9-௩௦ மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா ஜூன் மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இது தவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு பாட்டுக் கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8-30 மணி க்குமேல் 9 மணிக்குள் திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேராட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மனோதங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 17-வது வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ்தாமஸ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறார்கள்.

    10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாகஅம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சிநாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×