search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பெண் சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணை
    X

    புதுப்பெண் சாவு குறித்து கோட்டாட்சியர் விசாரணை

    • குமரிக்கு தேனிலவு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
    • சாப்பிட்ட உணவு காரணமாக உடல் பிரச்சினை ஏற்பட்டதால் இறந்தாரா?

    கன்னியாகுமரி :

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சுரேஷ்குமார். இவரது மனைவி கிருபா (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகின்றன. அவர்கள் தேனிலவு பயணமாக குமரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    களியலை அடுத்த சிற்றாறில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.பல்வேறு இடங்களுக்கு ஆனந்தமாக சென்று வந்த அவர்கள், நேற்று மதியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கிருபாவுக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது.

    அது மூச்சுத்திணறலை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சுரேஷ்குமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் கிருபாவை உடனடியாக குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    தேனிலவுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடையாலமூடு போலீசார் விரைந்து வந்து கிருபா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது சாப்பிட்ட உணவு காரணமாக உடல் பிரச்சினை ஏற்பட்டதால் இறந்தாரா? என்ற கோணங்களில் விசாரித்தனர். பின்பு கிருபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருபா இறந்த தகவல், அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்றே குமரி மாவட்டத்துக்கு வந்தனர். மகள் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    கிருபாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், அவரது சாவு குறித்து கோட்டாட்சியர் இன்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமனும் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×