search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரவின் நிழல் போன்ற புது முயற்சியான சினிமாக்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்-கோவையில் நடிகர் பார்த்திபன் பேட்டி
    X

    இரவின் நிழல் போன்ற புது முயற்சியான சினிமாக்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்-கோவையில் நடிகர் பார்த்திபன் பேட்டி

    • இரவின் நிழல் ஒரு புது முயற்சி. இது போன்ற படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வதே மிகவும் கடினம்.
    • இந்த படத்தின் கதை என்பது ஒரு சராசரி கதை அல்ல. அருவருப்பாக பிறந்த ஒரு மனிதரின் வாழ்க்கை. இந்த படம் மக்கள் பலருக்கும் தெரிய வேண்டும்.

    கோவை

    இயக்குனர் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள இரவின் நிழல் கடந்த 15-ந் திரையரங்குகளில் வெளியானது. அன்று முதல் இயக்குனர் பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

    இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிதா வருகை தந்தனர். அப்போது அவர்கள் ரசிகர்களை சந்தித்து திரைப்படம் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இரவின் நிழல் ஒரு புது முயற்சி. இது போன்ற படத்தை எடுப்பதற்கு முயற்சி செய்வதே மிகவும் கடினம். மக்களுக்கு என்ன பிடிக்குமோ, இதற்கு முன்பு எது பிடித்திருந்ததோ அதை மட்டுமே வைத்து படம் எடுத்து பணம் சம்பாதித்து செல்லலாம் என்பதை விட புதிதாக மக்களின் ரசனைக்கு தகுந்தாற் போல் புது முயற்சி மேற்கொள்ளலாம் என்று எடுக்கப்பட்டதே இந்த படம்.

    இந்த படத்தின் கதை என்பது ஒரு சராசரி கதை அல்ல. அருவருப்பாக பிறந்த ஒரு மனிதரின் வாழ்க்கை. இந்த படம் மக்கள் பலருக்கும் தெரிய வேண்டும். கமர்சியலாக இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

    இளைஞர்கள் அனைவரும் படத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். அதுமட்டுமின்றி பத்திரிக்கையாளர்களின் விமர்சனத்தினால் தான் இவ்வளவு கூட்டம் வந்தது.

    இது போன்ற சினிமாவிற்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் மிக பெரிய வெற்றியை அடைந்தால்தான் தயாரிப்பாளர்கள் இது போன்ற படங்களை எடுக்க முன்வருவார்கள்.

    இது போன்ற படம் எடுத்து சரியாக ஓடவில்லை என்றால் புது முயற்சியை எடுப்பவர்கள் தோற்றுவிடுவார்கள். மேலும் ஆங்கில படத்தை பார்க்கும் போது இருக்கின்ற தெளிவு தமிழ் படத்தை பார்க்கும் போது இருப்பதில்லை. ஆங்கில படத்தை பார்க்க வேறு கண்கள் தமிழ் படத்தை பார்க்க வேறு கண்கள்.ஆனால் அனைத்து இடங்களிலும் வன்முறை ஒரே மாதிரிதான் நடக்கிறது.

    மேலும் ஆண்கள் சிலர் பெண்கள் எப்படி இந்த படத்தை பார்ப்பார்கள் என நினைக்கிறார்கள். எதற்காக பெண்களுக்கு ஒரு வரையறையை ஆண்கள் வகுக்கிறார்கள். தவறான சில விமர்சனங்களால் எதார்த்தமாக ஒரு படத்தை எடுக்க முயற்சிக்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. தற்பொழுது படத்தின் வருமானத்தை தான் கொண்டாடுகிறோமே தவிர படத்தின் தரத்தை கொண்டாடுவதில்லை.

    இந்தத் திரைப்படம் வெற்றி அடையும் பொழுது என்னைவிட திறமை வாய்ந்தவர்களுக்கு இந்த திரைப்படம் வழிவகுக்கும். மேலும் புதிதாக முயற்சி செய்யும்பொழுது அதில் கிடைக்கும் வெற்றியின் மகிழ்ச்சி வேறு.

    பல்வேறு நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவது அந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது. நல்ல படங்களை பாருங்கள் என்பதே எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் அவரிடம் இளையராஜாவிற்கு எம்பி பதவி வழங்கப்பட்டது குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், இளையராஜா மியூசிக் ஆப் பாரடைஸ் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எனவே அவருக்கு இந்த எம்பி பதவி என்பது மிகப்பெரிய பதவி இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். நல்ல படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தற்பொழுது கிடைப்பதில்லை என்றார்.

    Next Story
    ×