search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா
    X

    காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா

    • உத்திரகோசமங்கையில் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா தொடங்கியது.
    • வருகிற 5-ந் தேதி கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், வருடம் முழுவதும் பாதுகாக்கும் பொருட்டும் சந்தனம் பூசுவது வழக்கம். வருட த்திற்கு ஒருமுறை மட்டுமே நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் உத்திர கோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு இரவு 7 மணியளவில் கோவில் முன்புறமுள்ள நர்த்தன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.தினமும் காலை 10 மணிக்கு மாணிக்கவாசகரின் உட்பிரகார வீதி உலாவும், திருவெம்பாவை பாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணிக்கு மேல் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அன்று காலை 11 மணியளவில் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனை நிறை வேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10.30 மணிய ளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமையன்று) அதிகாலை 5.30 மணியளவில் அருணோதய நேரத்தில் நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனக் காப்பிடுதலும் நடக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×