search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறை முடிந்தது.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோடை விடுமுறை முடிந்தது.. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன

    • முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு.
    • மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம்.

    சென்னை:

    கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாக இருந்ததால், 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

    இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதோடு, 60 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுகளும், 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன.

    கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இவை தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

    மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    Next Story
    ×