search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த நாள் கொண்டாட்டத்தால் சுய நினைவை இழந்த மருத்துவ கல்லூரி மாணவர்- 4 மாணவர்கள் சஸ்பெண்டு
    X

    பிறந்த நாள் கொண்டாட்டத்தால் சுய நினைவை இழந்த மருத்துவ கல்லூரி மாணவர்- 4 மாணவர்கள் சஸ்பெண்டு

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் மீது 4 மாணவர்கள் விழுந்து விளையாடியதில் சுய நினைவை இழந்தார்.
    • 4 மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து டீன் உத்தரவிட்டுள்ளார்.

    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த கல்லூரியில் சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் சபீக் அகமது என்பவர் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். மாணவருக்கு கடந்த 10-ந் தேதி பிறந்த நாளாகும்.

    இவரது பிறந்தநாளை சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினார்கள். அந்த நேரம் மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சபீக் அகமதுவை தூக்கியும் விளையாடினார்கள். அந்த நேரம் கீழே விழுந்த சபீக் அகமது மீது மற்ற மாணவர்கள் ஒருவர் மாறி மற்றொருவர் விழுந்தார்கள்.

    அந்த நேரம் சபீக் அகமதுவின் கழுத்து பகுதியில் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் பதறிபோன சக மாணவர்கள் இது குறித்து விடுதி பொறுப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவரை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மாணவருக்கு கழுத்து பகுதியில் செல்லக்கூடிய நரம்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுய நினைவை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுய நினைவுக்கு அவர் வரவில்லை. தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

    இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 மருத்துவ கல்லூரி மாணவர்களை 3 மாதத்திற்கு சஸ்பெண்டு செய்து, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

    மாணவர்களிடையே ராகிங், ஈவ்டீசிங் போன்றவை இருக்க கூடாது என்று ஒவ்வொரு கல்லூரி நிர்வாகத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில பஸ் டே என்ற பெயரில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், மருத்துவ மாணவர் கழுத்து பகுதியில் சக மாணவர்கள் விழுந்து விளையாடியதில், நரம்பு துண்டிக்கப்பட்டு மாணவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×