search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் வெடிப்பு சம்பவத்தை பா.ஜ.க. அரசியலாக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
    X

    கார் வெடிப்பு சம்பவத்தை பா.ஜ.க. அரசியலாக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    கோவை:

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் கடந்த 23-ந்தேதி அதிகாலை நடந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தமிழக டி.ஜி.பி.யும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேரிடம் அந்த கார் கைமாறி உள்ளது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கோவையில் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை பாரதிய ஜனதா அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. அதன் தலைவர் உண்மைத் தன்மை தெரியாமல் பேசி வருகிறார்.

    காவல்துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் உண்மை தன்மையை வெளியிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாக பேசியுள்ளார். எனவே அவருக்கு இந்த ஆதாரங்கள் எப்படி கிடைத்தது, எதன் அடிப்படையில் இவ்வாறு அவர் வெளியிட்டார் என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. முதலில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வினர் கூறியதனால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.

    கோவையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அரசியலாக்க நினைக்கும் பாரதிய ஜனதா, முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது அவர்கள் வந்து மரியாதை செலுத்தினார்களா அல்லது அதுசம்பந்தமாக ஏதாவது பேசினார்களா?

    இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பாதிக்கப்படவில்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் பா.ஜ.க.வினர் முழு அடைப்பு அறிவித்துள்ளனர். இது தேவையற்றது. சட்டத்துக்கு புறம்பாக கடைகளை அடைக்க சொன்னாலும், மிரட்டினாலோ மக்களை துன்புறுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது, மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஆனால் பாஜகவினர் மட்டும்தான் இதனை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த சம்பவத்தையும் தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர், உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற அச்சத்தை உருவாக்க வேண்டாம்.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதை காட்டுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். இதில் மாற்றமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×