என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
- பொங்கல் பண்டிகை அன்று ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் வந்துவிடும்.
ஈரோடு:
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகை அன்று ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை 223 விசைத்தறி, தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்திற்கு உட்பட்ட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் 1.80 கோடி வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் 43 சொசைட்டிகளில் உள்ள 14 ஆயிரம் தறிகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மொத்த உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சதவீதம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.
ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் வந்துவிடும். அதன் பின்னர் உற்பத்தி பணி தொடங்கி விடும். ஆனால் கடந்த வருடம் தாமதமாக ஆர்டர் வந்தது. அதேபோல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகியும் இதுவரை இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் வரவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் கிடைத்து உற்பத்தியை தொடங்கி விடுவோம். ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகியும் ஆர்டர் இதுவரை கிடைக்கவில்லை.
இதனால் குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அரசு இனியும் தாமதிக்காமல் ஆர்டரை வழங்கி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






