search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி 7-ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு- வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
    X

    வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி 7-ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு- வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

    • வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார்.
    • புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

    வேப்பூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடித்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி முக்கியமான புத்தகங்களை மறதியாக வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்.

    அந்த புத்தகம் கடந்த 7-ந்தேதியன்று தேவைப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு போன் செய்து யாரையாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று மாணவிக்கு யோசனை தோன்றியுள்ளது. இதற்கு போன் செய்ய செல்போன் தேவைப்பட்டது. இதற்காக பள்ளி அருகே உள்ள சாலையில் சென்ற ஒரு வாலிபரிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார். புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து செல்போனை வாலிபரிடம் திருப்பி கொடுத்த மாணவி, அழுதுள்ளார்.

    வாலிபர் ஏன் அழுகிறாய்? என்று கேட்டபோது, நடந்த விஷயங்களை மாணவி கூறினார். நான் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்கிறேன். என்னுடன் வா, உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வரலாம் என கூறினார்.

    இதனை நம்பிய அந்த மாணவி, வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். அப்போது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் செல்லாமல் விருத்தாசலம் சாலையில் சென்றார். அங்கிருந்த சவுக்கு தோப்பிற்கு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் பாலியல் சீண்டல் செய்தார். இதனை எதிர்பாராத மாணவி, வாலிபரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் தப்பமுடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அதனை தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் பதிவு செய்தார். இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விடுவேன் என்று மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த வேப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்தது ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரது மகன் ஜீவா (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் கேட்டரிங் முடித்து விட்டு தற்போது சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×