என் மலர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
- அரசு பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- கால்கள் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது.
பல்லடம் :
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது70). இவர் சேலத்தில் வசிக்கும் மகன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு பேத்தி நிவேதா, பேரன் பரணிதரன் ஆகியோருடன் நேற்று ஈரோட்டிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் அரசு பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் பல்லடம் பஸ் நிலையத்தில், பயணிகளை இறக்கி விட்டு புறப்பட தயாரானது. அப்போது பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்று வருவதாக பேரன், பேத்தியிடம் கூறிவிட்டு பஸ் புறப்பட்டது கவனிக்காமல், பஸ்சில் இருந்து அழகம்மாள் இறங்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் கால்கள் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்லடம் பஸ் நிலையத்தினுள் பிளாஸ்டிக்கில் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. அது தற்போது உடைந்து போனதால் பஸ்கள், மற்றும் வாகனங்கள், அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.