என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகையில் உயிரிழந்த காவலர்கள் நினைவிடத்தில் அஞ்சலி.
உயிரிழந்த காவலர்களுக்கு நினைவஞ்சலி
- நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
- பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி.
நாகப்பட்டினம்:
நீத்தார் நினைவு நாளை யொட்டி, பணியின்போது உயிர் நீத்தகாவலர்களுக்கு நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் வீரமரணமடைந்தனர்.
அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21- ம் தேதி காவலர்கள் வீரவணக்க தினம் (நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பணியின் போது மரணமடைந்த காவல் மற்றும் காவல்படையைச் சேர்ந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதன்படி, நீத்தார் நினைவு நாளான நேற்று நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்திலுள்ள உயிர் நீத்தோர் நினைவுத்தூனுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்.
கப்பல்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மேந்தர் சிங், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை கலெக்டர்மற்றும் எஸ்.பி வழங்கினர்.






