என் மலர்
உள்ளூர் செய்திகள்

விமான நிலையங்களை போல் ரெயிலையும் தனியார் மயமாக்க முயற்சி - மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி
- மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயமாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
- விமானங்களை தனியாருக்கு விற்பனை செய்ததை போல் ரெயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள்.
திருச்சி :
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசின் ரெயில்வே துறை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ரெயில்வே ஊழியர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.யூ. சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் திருச்சியில் இன்று ரெயில்வே ஊழியர்களிடம் மேற்கண்ட இரண்டு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார் மயமாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ரெயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் ரெயில் கட்டணம் உயர்வது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு போகும் அபாயம் ஏற்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தொடர்ந்து எங்களுடைய சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரதமரும், ரெயில்வே அமைச்சரும், ரெயில்வே துறையை தனியார்மயமாக்கப்படாது என்று பொய் சொல்லி வருகிறார்கள்.
விமானங்களை தனியாருக்கு விற்பனை செய்ததை போல் ரெயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். ரெயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி அதில் நாங்கள் வெற்றி பெறுவோம். கொரோனா காலத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை மத்தியஅரசு நிறைவேற்ற வேண்டும்.
அண்மையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தனியார் மூலம் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை மூலம் தனியாருக்கு நிறைய லாபம் கிடைத்தது. அப்படி லாபத்தின் ஒரு பங்குயை மத்திய அரசு ஏன் கேட்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறதா? ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் ரெயில் சேவையை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கோட்டச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன், பழனிவேல், வெங்கடேஷ் குமார், சித்தரேசன், சிவகுமார், செல்வகுமார், வெங்கடேசன், டேனியல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






