என் மலர்
இந்தியா

சீன விசா முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய கார்த்தி சிதம்பரம் வழக்கு மீது 5-ந்தேதி தீர்ப்பு

- கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
- இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.
புதுடெல்லி:
பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் புதிய வழக்கை பதிவு செய்தது. இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
தனக்கு எதிராக குற்ற வழக்கு தொடர அனுமதி பெறவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.