என் மலர்
இந்தியா

அரசு திட்டங்களுக்கு கோவில் நன்கொடையை கேட்கும் இமாச்சல் அரசு - பாஜக கடும் எதிர்ப்பு

- இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
- காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால் இமாச்சலப் பிரதேச அரசு , சில நலத்திட்டங்களுக்கு நிதியளிக்க கோவில் அறக்கட்டளைகளின் உதவியை நாடியுள்ளது . காங்கிரஸ் அரசின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், "கடந்த கால எந்த அரசாங்கமும் பட்ஜெட் திட்டங்களுக்கு கோவில் அறக்கட்டளை நிதியைப் பயன்படுத்தியதில்லை. வழக்கமான அரசு செலவுகளுக்கு கோவில் நிதியைப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒருபுறம் காங்கிரஸ் தலைவர்கள் 'சனாதன தர்மத்தையும்' அதை பின்பற்றுபவர்களையும் அவமதிக்கிறார்கள், மறுபுறம், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கொள்கைகளுக்கு நிதியளிக்க கோவில் நன்கொடைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கோவில் கமிட்டி, பொதுமக்கள் உட்பட அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.