என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
    X

    சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

    • ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை.
    • பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99 கேள்விகள் கேட்டுள்ளோம். இறுதியாக 100-வது கேள்வி கேட்கிறோம்.

    விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, தேசநலனுக்காக செயல்படுவீர்களா? என்று கேட்கிறோம். அதானி விவகாரத்தில், கடந்த 2-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், அக்குழுவுக்கு விசாரணை குழுக்கள் மீது முறைப்படியான அதிகாரவரம்பு கிடையாது.

    நண்பர்களுடனான நெருக்கம் பற்றியோ, நண்பர்களை செழிப்பாக்க ஆட்சியை பயன்படுத்தியது பற்றியோ விசாரிக்க நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. அக்குழு, அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும்.

    நீங்கள் எதிர்க்கட்சிகள் மீதும், சிவில் அமைப்புகள் மீதும், சுதந்திரமான தொழில் நிறுவனங்கள் மீதும் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறீர்கள். அதே தீவிரத்துடன், 1947-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த பெரிய ஊழலான அதானி ஊழலை விசாரிக்க அந்த விசாரணை அமைப்புகளை பயன்படுத்துங்கள் என்று கேட்கிறோம்.

    எனவே, இந்த ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாக விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுதான் தேவை. முந்தைய பங்குச்சந்தை ஊழல்களை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழுவைத்தான் காங்கிரஸ் அரசுகளும், பா.ஜனதா அரசுகளும் அமைத்தன.

    ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கைவிட்டால், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சொல்கிறது.

    ராகுல்காந்தி மன்னிப்பு கேட்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு கோரிக்கை, பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×