என் மலர்
இந்தியா

என்ன வயசானாலும் மகாராஷ்டிராவை சரியான வழியில் கொண்டு வரும் வரை ஓயமாட்டேன்: சரத் பவார்
- அஜித் பவார் கட்சி தலைவர்கள் சரத் பவார் கட்சியில் இணைந்தனர்.
- வயதை சுட்டிக்காட்டியபோது, வயது பற்றி கவலைப்பட வேண்டாம் என சரத் பவார் விளக்கம்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்) கட்சி தலைவர் சரத் பவார், தன்னுடைய வயது என்னவாக இருந்தாலும் சரி, மகாராஷ்டிரா மாநிலத்தை சரியான வழியில் கொண்டும் வரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராம்ராஜே நாய்க் நிம்பால்கரின் சகோதரர் சஞ்சீவ் ராஜே நாய்க் நிம்பால்கர், பால்டன் தொகுதி எம்.எல்.ஏ. தீபக் சவான் ஆகியோர் சரத் பவார் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் பேசும்போது சரத் பவார் கூறியதாவது:-
சில இளைஞர்கள் தங்களுடைய கையில் பேனர்கள் ஏந்தியதை பார்த்தேன். அதில் என்னுடைய படம் இருந்தது. அதில் 84 வயதான நபர் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீங்கள் வயதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், 84 வயதாக இருந்தாலும் சரி அல்லது 90 வயதாக இருந்தாலும் சரி. இந்த வயதான மனிதன் நிறுத்தமாட்டார். மாநிலத்தை மீண்டும் சரியான வழியில் கொண்டு வரும்வரை நான் ஓயமாட்டேன். உறுதியாக உங்களுடைய உதவியை பெறுவேன்.
சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சேதமடைந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் ஊழலில் ஈடுபடுவது அவர்களின் கொள்கை. அதனால் அவர்கள் கையிலிருந்து அதிகாரத்தைப் பறிப்பது உங்களுடைய மற்றும் என்னுடைய பொறுப்பாகும்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரா பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காண இருக்கின்றன.






