search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன்"

    • இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    • ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும்.

    முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம்.

    வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் எந்த கெட்ட சொற்களையும் பேச கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு புற வெளிபிரகாரத்தில் மூலவர் கும்ப விமான தரிசனம் காணும் வகையில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியாக பார்த்தால் மூலவர் கும்ப விமானத்தை காணலாம். இங்கு அமைக்கப்பட்ட படியில் ஏறி நின்று பக்தர்கள் மூலவரின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி செல்கிறார்கள்.

    • சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 30-ந்தேதி சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வேடர் அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி காட்சிஅளித்தார்.

    இதை அடுத்து காலை 7 மணி அளவில் விநாயகர் பூஜை, புண்யாகம், விழா நடைபெற இறை அனுமதி பெறுதல், மண் எடுத்தல் முளைப்பாளிகை இடுதல் ஆகியவை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து கருவறையை அடுத்துள்ள மகா மண்டபத்தில் சுப்பிமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினார். இதை அடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கும் மற்றும் பிற தெய்வங்களுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி காப்பு கட்டிக் கொண்டனர். கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி வரை தினமும் காலையிலும் மாலையிலும் அர்த்தமண்டபத்தில் யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 6மணி முதல் 7.30 மணி வரை சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவர் சண்முகார்ச்சனை நடக்கிறது.மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதல் மற்றும் சூரசம்காரத்திற்கு எழுந்தருளுதல், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார விழா நடைபெறுகிறது. 31-ந் தேதிகாலை 9.30.மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பபல்லக்கில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதுபோல் கோவை கோவில்பாளையத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த காலகாலேஸ்வரர் கோவிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா நேற்று காலை 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • நவம்பர் 1-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. முருகன், வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் சிங்காரவேலவர் தங்கமஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இந்த விழா அடுத்த மாதம்( நவம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது, நேற்று இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) தங்கமயில் வாகனத் திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    29-ந்தேதி(சனிக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை9 மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 31-ந் தேதி(திங்கட்கிழமை) தெய்வ சேனை திருக்கல்யாணமும், நவம்பர் 1-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காண முடியும்.
    • 31-ந்தேதி மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கந்தசஷ்டி உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து 1-ந்தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதல் கஜமுகா சூரனை வதம் செய்கிறார். பின்னர் தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகா சூரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் பாலுகோபன் சூரனையும் வதம் செய்கிறார். பின்னர் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலை திடலில் 4-வதாக சூரபத்மன் சூரனை வதம் செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தடைகிறார்.

    31-ந்தேதி காலை 10 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 1-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்ததும் வாழைத்தண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லிதழை ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடிப்பார்கள். தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டும் காண முடியும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • நாளை காலை 9 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 30-ந்தேதி பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள்.

    ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தன.

    கோவிலில் முருகனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகனை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் தங்களது வலது கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார்கள். கோவிலின் பூசாரிகள் பக்தர்களுக்கு காப்பு கயிறு அணிவித்தனர். விழாவையொட்டி பக்தர்கள் 6 நாட்களுக்கு தொடர்ந்து விரதம் கடைபிடிப்பார்கள்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சடாஷர ஹோமமும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 31-ந் தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும், பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இதேபோல் அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது.

    • ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    காஞ்சீபுரம் குமரக்கோட்டத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து,பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், கிராம்பு மாலை, மற்றும் சாமந்திப்பூ, மல்லிகைப்பூ, மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு லட்சார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் மான் வாகனத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.
    • முருகன் அவதாரத்திற்கான புராண கதை வருமாறு:-

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதல எழுத்துகள் பன்னிரண்டும் தோள்களாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகன் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். முருகன் நமக்கு வீடு அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேறை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப் படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் மனிதர்களிடம் உள்ள ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள். இதற்காகத்தான் முருகன் அவதாரம் எடுத்தார். அதற்கான புராண கதை வருமாறு:-

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவன் சூரபத்மன். தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெ ருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சூரபத்மனின் தவ வலிமையை மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.

    அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்தது போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான். இப்படித்தான் முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான்.

    விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான். பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப் படையும் கிளம்பியது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்று தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப் பெருமான் முற்றுப் பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.
    • திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு.

    மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற சூரபத்மன் மேல் அம்பு எய்து அவனைச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றுகிறான்.

    சேவலைத் தன் கொடியாக்கிக் கொள்கிறான். மயிலை வாகனமாக்கிக் கொள்கிறான். முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.

    * முருகனின் ஆயுதம் வேல். மற்ற கடவுளரின் திருக்கரங்களில் உள்ள சூலம், சங்கு, சக்கரம் போன்றவை கடவுளரின் நாமங்களோடு அல்லாமல் தனித்த முறையில் பெயர்களாக அமைவதில்லை. ஆனால் முருகன் கையிலுள்ள வேல், அப்படியே தமிழர்கள் பலருக்குப் பெயராக அமைவது இந்த வேலின் தனிச் சிறப்பு.

    வேலாயுதம், சக்திவேல், கந்தவேல், வடிவேல், ஞானவேல், தங்கவேல் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டி மகிழ்கிறார்கள் தமிழர்கள். விரோதியையும் கொல்லாது விடுத்த வேலாயுதத்தின் மேல் தமிழர்கள் மிகுந்த பக்தி செலுத்துகிறார்கள்.

    * முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.

    'மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'

    என்பது தொல்காப்பிய நூற்பா.

    திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அறுபடை வீடுகொண்ட முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.

    * எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அவர் முருகக் கடவுளைத்தான் போற்றுகிறார்.

    'தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத்தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!'

    தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருள்.

    * பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் சங்கப் புலவர் நக்கீரர் எழுதியது.

    முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப்படுத்துவதே இந்த ஆற்றுப்படை நூலின் போக்கு. 'நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!' எனச் சிவபெருமானுடன் சண்டையிட்ட அதே நக்கீரர்தான் முருகனைப் போற்றும் இந்த நூலின் ஆசிரியர்.

    திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது. ஒரு மலைச்சாரலில் குளத்தின் கரையில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து நக்கீரர் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டார்.

    ஆலமரத்தின் பழுத்த இலையொன்று ஒரு பாதி தண்ணீரிலும் மறுபாதி தரையிலுமாக விழுந்தது. அடுத்த கணம் தண்ணீரில் விழுந்த பாதி மீன்வடிவமாக மாறியது. தரையில் விழுந்த பாதி பறவை வடிவம் பெற்றது. இரண்டும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருந்தன.

    இந்தக் காட்சியில் கருத்தைச் செலுத்தியதால் நக்கீரரின் சிவபூஜைக்கு பங்கம் உண்டாயிற்று. அதற்கு முன் இவ்விதம் சிவபூஜையில் பங்கமேற்பட்ட 999 பேரை ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது ஒரு பூதம்.

    அவர்களோடு இன்னொருவரை இட்டு நிரப்பி அவர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக்கி, அதன்பின் அனைவரையும் உண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அது. நக்கீரரையும் அவர்களுடன் அடைத்துவிட்டு உண்பதற்கு முன் நீராடப் போயிற்று பூதம்.

    நக்கீரர் வருகையால் அவரோடு தாங்கள் அனைவரும் இறக்கப் போவதை எண்ணி மற்றவர்கள் அழுது அரற்றினார்கள். அவர்கள் நிலைக்கு இரங்கிய நக்கீரர் முருகனை வேண்டி திருமுருகாற்றுப் படை என்ற செய்யுள் நூலை இயற்றினார்.

    உடனே முருகக்கடவுள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் அனைவரையும் குகையிலிருந்து விடுவித்துக் காத்தருளினான் என்கிறது திருமுருகாற்றுப்படையின் தோற்றத்தைச் சொல்லும் கதை.

    திருமுருகாற்றுப் படையின் இறுதியில் சில வெண்பாக்கள் காணப்படுகின்றன. அவற்றை இயற்றியவர் நக்கீரரா அல்லது வேறு யாராவது ஒருவரா என்பதைப் பற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. அந்த வெண்பாக்களின் இலக்கிய அழகு நெஞ்சை அள்ளுகிறது:

    'அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்

    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

    முருகா என்று ஓதுவார் முன்!'

    'முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்

    தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்!'

    * சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. 'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

    பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகை, 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் எனப் பிள்ளைத் தமிழ் இரண்டு வகைப்படும்.

    'காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்' என்ற பத்துப் பருவங்களை ஆண் குழந்தைக்கு உரியதாக்கிப் பாடுவதே ஆண்பால் பிள்ளைத் தமிழ்.

    பகழிக் கூத்தர் முருகக் கடவுளைக் குழந்தையாக்கி, தாலாட்டுப் பாடி முத்தம் தருமாறு வேண்டி, நிலவைக் காட்டிச் சோறூட்டி என இன்னும் பல வகைகளில் பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கிறது.

    * காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார். குமரக் கோட்டத்தில் அதை நாள்தோறும் ஒரு பகுதியாகப் படித்து அரங்கேற்றினார்.

    அந்த அரங்கேற்றம் முற்றுப்பெற்றபோது, கச்சியப்ப சிவாசாரியாரை பொற்சிவிகையில் அமரவைத்து தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு வேளாளர்களும் சிவிகையைத் தாங்கி, சாமரம் வீசி வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்ததாக படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

    * முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பாலன் தேவராயன் என்ற புலவரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் பெரும்புகழ் பெற்றது. இந்த பாலன் தேவராயன் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் குருவான மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இன்னொரு மாணவராவார்.

    'சிரகிரி வேலவன் சீக்கிரம் காக்க' என இதில் வரும் வரியில் சிரகிரி என்பது சென்னிமலையைக் குறிப்பது. சென்னிமலை முருகனைக் குறித்துப் பாடப்பட்ட நூல்தான் கந்தசஷ்டி கவசம்.

    தொடக்கத்தில் நேரிசை வெண்பா, அதன்பின் குறள் வெண்பா, அதன்பின் நிலைமண்டில ஆசிரியப்பா என்ற பாவகையில் புனையப்பட்ட இந்நூல் மொத்தம் 238 அடிகளைக் கொண்டது.

    தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். கணக்கர் வேலை பார்த்த வீரசாமிப் பிள்ளையின் புதல்வர். 'தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேடமலை மாலை' போன்ற நூல்களை தேவராயர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.

    முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக்கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.

    'செககண செககண செககண செகென

    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென'

    எனத் தொடங்கி வரும் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.

    *சம்ஸ்கிருதத்திலும் முருகனைப் பற்றிய புகழ்பெற்ற தோத்திரங்கள் உள்ளன. ஆதிசங்கரர் அருளிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் 'ஸதாபால ரூபாபி' எனத் தொடங்கும் சுப்ரமண்ய புஜங்கம். ஆதி சங்கரருக்கு வயிற்று வலி இருந்ததாகவும் அது நீங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு திருச்செந்தூர் முருகள்மேல் அவர் இந்த சுலோகத்தைப் படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அவர் இந்த சுலோகத்தைச் சொல்லத் தொடங்கியபோது திருச்செந்தூர் முருகன் சந்நிதியிலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு ஊர்ந்து சென்றதாம். அதனால் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்றே வளைந்து வளைந்து அமைந்துள்ள ஓசையில் சங்கரர் இந்நூலைப் படைத்தார்.

    இன்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சன்னிதிக்கு முன்பாக இருபுறமும் அமைந்துள்ள தூண்களில் ஒரு தூணில் ஆதிசங்கரர் சிலை செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    கந்தசஷ்டியன்று முருகனைத் துதித்து இம்மைப் பயன், மறுமைப் பயன் இரண்டையும் பெறலாம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • மூலவர் சுப்ரமணியசுவாமிக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
    • சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவையை அடுத்த மருதமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படை வீடு என முருக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது.

    கந்த சஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டது பின்னர் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

    அதைத்தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதன்பிறகு மண்டபத்தில் காலையிலும் மாலையிலும் சண்முகார்ச்சனை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்து தங்கள் விரதத்தை தொடர்ந்தனர்.

    • சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள்.
    • எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.

    சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

    ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

    இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.

    பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொ ண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றை தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    • முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார்.
    • கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும்.

    கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது.

    முருகன் இந்தத்தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார். அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன. உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார்.

    பின் வேண்டிக் கொண்டார். தாயே உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என்மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார். உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். இதனால் அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர். இதனால் பிரம்மஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றார். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.

    • கந்தபுராணம் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.
    • முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.

    கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.

    வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

    வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.

    வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

    திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

    மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.

    பிரணவம்

    பிரணவப் பொருள்தான் என்ன? பிர என்றால் விசேஷமானது. "நவம்" என்றால் புதுமை. அனுபவிக்க புத்தம்புது விசேஷ உண்மைகளை உணர்த்துவது பிரணவம் (பிர+ நவம்) .என்றும் வாடாமல், காலத்தால் தேயாமல் எப்போதும் புதுமையாகவே இருக்கும் ஆன்ம தத்துவம்தான் பிரணவம்.

    ×