search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி ஜின்பிங்"

    • டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மேத்யூ என்ற இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

    இதில் டிரம்பின் வலது காதில் காயம் ஏற்பட்டு, நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில், துப்பாக்கி சூட்டிற்கு பிறகு மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் தனது முதல் பிரசார பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "ஜனாதிபதியாக இருந்தபோது சீனா மீதான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விவாதித்தோம். துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும், சீன அதிபர் ஜி ஜின்பிங் என்ன நடந்தது என்று நலம் விசாரித்தார்."

    "இது குறித்து ஜி ஜின் பிங் எனக்கு ஒரு அழகான கடிதம் எழுதினார். நான் ஜனாதிபதி ஜி ஜின் பிங்குடன் மிகவும் நன்றாகப் பழகினேன்" என்று கூறினார்.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்.
    • அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம்- ஜெலன்ஸ்கி.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் போர் தொடுத்தது. இன்னும் தாக்குதல் நடைபெற்றுதான் வருகிறது. ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரிதும் நம்பியுள்ளது.

    அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    அதேவேளையில் வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைவிதித்து வருகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், அமைதிக்கான மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறது. இதில் பெரும்பாலான நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோன் மூலம் பேசியதாகவும், அப்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம். ஏனென்றால், அவர் எனக்கு வார்த்தை கொடுத்துள்ளார்" என்றார்.

    இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில் "ரஷியாவிற்கு சீனா ஆயுதங்கள் விற்பனை செய்யவில்லை என்கிறது. ஆனால், ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திறன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இவைகள் ரஷியாவிற்கு உதவுகின்றன.

    உக்ரைனுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதி தொடர்பான ஒரே பார்வை இருந்தால், இரு நாட்டிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். சீனாவுக்கு வேறு பார்வை இருந்தால், அமைதிக்கான மாற்று தயார் செய்யும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    • டிரம்ப், தனது பதவிக்காலத்தில் சீனாவிற்கு 25 சதவீத இறக்குமதி விதித்திருந்தார்
    • என் பதவிக்காலத்தில் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தது என்றார் டிரம்ப்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

    நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.

    இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார்.

    உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.


    இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது.

    அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:

    தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது.

    ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.

    3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு "அதிக முன்னுரிமை தரப்படும் நாடு" (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாட்டு மக்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 2023ல் தெரிவித்திருந்தார்
    • மக்களின் உணர்வை பொறுத்தே சீன உறவு நிர்ணயிக்கப்படும் என ட்சாய் இங்-வென் தெரிவித்தார்

    சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று கொள்ளாமல் சீனா அந்நாட்டின் மீது உரிமை கொண்டாடி வருகிறது.

    2024 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங், தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். ஜி ஜின்பிங், தனது உரையில், "தைவான், சீனாவுடன் இணைக்கப்படும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

    கடந்த வருடம் ஜி ஜின்பிங் ஆற்றிய புத்தாண்டு உரையில், "தைவான் தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்" என அறிவித்திருந்தார்.

    ஆனால், இவ்வருடம் திட்டவட்டமாக இணைப்பை குறித்து அவர் பேசியிருப்பது புதிய சச்சரவிற்கு வழிவகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    கடந்த 8 வருடங்களாக தைவான் நாட்டை ஆண்டு வரும் ஜனநாயக வளர்ச்சி கட்சியை (Democratic Progressive Party) சேர்ந்த அதிபர் ட்சாய் இங்-வென் (Tsai Ing-wen) தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில், "மக்களின் உணர்வை பொறுத்தே சீனாவுடனான உறவு நிர்ணயிக்கப்படும்" என அறிவித்தார். தைவானின் மற்றொரு முக்கிய கட்சியான குவோமிண்டாங் கட்சி (KMT) சீனாவுடன் நட்பு ரீதியான உறவை மேற்கொள்ள வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ராணுவ நடவடிக்கை மூலம் தைவானை தன் நாட்டுடன் இணைக்க சீனா முயலுமா என்பதும் அவ்வாறு நடந்தால் அமெரிக்கா தலையிடுமா என்பதும் வரும் மாதங்களில் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
    • ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.

    2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.

    இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

    தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.

    "இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.

    அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.

    மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.

    இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.

    இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

    அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை. 

    • அமெரிக்கா சென்றுள்ள ஜி ஜின்பிங், அந்நாட்டின் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • திபெத், ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து ஜோ பைடன் கவலை தெரிவித்தார்.

    சீனாவுக்கும் அண்டை நாடுகளாக இந்தியா, திபெத், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவும் நிகழ்வு நடந்து வருகிறது. கல்வான் பகுதியில் ஊடுருவல் நடந்தபோது இரு ராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

    தைவான் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக சீனாவுக்கும் அந்நாட்டிற்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டிற்கு இடையே அமெரிக்க- சீனா தொழில் கவுன்சில் மற்றும் அமெரிக்கா- சீனா உறவுக்கான கமிட்டி ஆகியவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அருகில் உள்ள நாடுகளுடன் ஒரு பதற்றமான நிலை உருவாகி இருப்பது தொழில்துறைகளில் கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜி ஜின்பிங் பதில் அளிக்கையில் "சீனா மோதல் மற்றும் போரை தூண்டவில்லை. வெளிநாட்டு நிலத்தை சிங்கிள் இன்ச் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை" என்றார்.

    ஜோ பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பின்போது ஜோ பைடன், திபெத் மற்றும் ஹாங்காங்கின் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து தனது கவலையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
    • இரு தலைவர்கள் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சென்றார். சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அவர்களின் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    • இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அபெக் மாநாட்டின்போது சந்திப்பு நடைபெற இருக்கிறது
    • ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நோக்கமாக கொண்டுள்ளோம் என வெள்ளை மாளிகை அறிவிப்பு

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார்.

    அப்போது, ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரின் ஜீன்-பியர், நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ''ஜோ பைடன் இந்த சந்திப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கும் என நினைக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

    இந்திய பிரதமர் மோடிக்கும் அபெக் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேபினட் அளவிலான மந்திரி இந்தியா சார்பில் கலந்த கொள்ள வாய்ப்புள்ளது.

    தைவான் தொடர்பான பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

    • இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை
    • அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன்

    இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை" என தெரிவித்திருந்தார்.

    இந்த வார தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் தூதர் வாங் யீ இடையேயான சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த நவம்பரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த போது, எல்லை பிரச்னை குறித்தும் பேசியதாகவும், ஒருமித்த கருத்தை எட்டியதாகவும் கூறியிருந்தது.

    நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், அரிந்தம் பாக்சி அந்த அறிக்கையின் கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக கூறியிருப்பதாவது:

    "இரு நாட்டு உறவுகளில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கருகே உள்ள பகுதிகளில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இது குறித்து நவம்பரில் இரு தலைவர்களும் பேசினர். இதை அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசினார்கள்.

    இவ்வாறு பாக்சி தெரிவித்திருக்கிறார்.

    கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டன. விரிவான ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பல பகுதிகளில் துருப்புக்கள் விலக்கி கொள்ளப்பட்டன.

    • 41.5 கோடி பேர் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்
    • போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது- ஜி ஜின்பிங்

    சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    உடைந்த சோவியத் ஒன்றிய நாடுகளில், பல வருடங்களுக்கு முன் 'நிற புரட்சி' எனப்படும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் கோரும் மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன.

    இதனை போன்று சீனாவில் நடத்த சில அயல்நாட்டு சக்திகள் முயற்சிப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் நுழைவதை சீனா விரும்பவில்லை என சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார்.

    மேலும் அவர், போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது.

    அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

    திரள்திரளாக உறுப்பினர்கள் கம்யூனிஸ கொள்கையிலும் கட்சியிலும் இருந்து விலகியதால்தான் சோவியத் ஒன்றியம் உடைய தொடங்கியது குறிப்படத்தக்கது.

    அதேபோல் சீனாவிலும் நடக்கலாம் என கம்யூனிஸ்ட் கட்சி அச்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டிலும், உலகெங்கிலும் பல நாடுகளுடனும் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை சீனா எதிர்கொண்டு வருகிறது.

    கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததே, கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என அக்கட்சி கருதுகிறது.

    ஆனால் மக்களின் குரலுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கில் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் சீனாவில் தற்போது அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்காகவே கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனரே தவிர கொள்கைகளுக்காக கட்சியில் இருக்குமாறு அதிபர் விடுத்த அழைப்பிற்கு போதிய வரவேற்பில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    உலக வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியான சீனாவின் ஒரே கட்சியில் இத்தகைய ஆபத்து உருவாகியிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • சவால்களை திறம்பட அடக்கிவிட்டதாக உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு புதினுக்கு முக்கியமானது.
    • வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார்.

    2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு நிகழ்வை நடத்துகிறது. உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு இந்த உச்சிமாநாடு நடந்தது. ஆனால், இந்த முறை, இது ஆன்லைனில் நடத்தப்படும் என்று இந்தியா அறிவித்திருக்கிறது.

    இரு வாரங்களுக்கு முன் ரஷியாவில், அதிபர் புதினுக்கு எதிராக நடைபெற்ற ஆயுதமேந்திய வாக்னர் கிளர்ச்சியை அவர் வெற்றிகரமாக ஒடுக்கிய பிறகு நடைபெறும் ஒரு சர்வதேச நிகழ்வில் அவர் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கத்திய நாடுகள் தோற்றுவிட்டதாக காட்டத் துடிக்கும் புதினுக்கு, அனைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தனது அரசாங்கத்திற்கான சவால்கள் அனைத்தையும் திறம்பட அடக்கி விட்டதாகவும் உலகுக்கு உணர்த்த இந்த மாநாடு முன்னெப்போதையும் விட முக்கியமானது.

    இது குறித்து, வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனம் எனப்படும் அமைப்பின் இயக்குனர் மைக்கேல் கூகல்மேன் கூறும்போது, "இந்த கூட்டம், உலகளவில் புதின் தனது வலிமையையும் நம்பகத்தன்மையையும் முன்வைக்க கிடைத்திருக்கும் சில வாய்ப்புகளில் ஒன்றாகும்" என கூறியிருக்கிறார்.

    அதே போல் இது இந்தியாவிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பாக அமையலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய-ரஷிய உறவு வலுவாக இருந்து வருகிறது. ரஷியாவின் கச்சா எண்ணெயை இந்தியா சாதனை அளவில் சேகரித்து வைத்திருக்கிறது. மேலும், தனது 60% பாதுகாப்பு தளவாடங்களுக்கு ரஷியாவையே இந்தியா நம்பியுள்ளது.

    "ரேண்ட் கார்ப்பரேஷன்" (RAND Corporation) என்னும் அமெரிக்காவில் உள்ள லாபநோக்கமற்ற, அமைப்புசாரா பல்துறை சிந்தனை நிறுவனத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன் கூறுகையில், "வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா அனைத்து நாட்டுடனும் ஒரே நேரத்தில் நட்பில் இருக்கும் சித்தாந்தத்தோடு செயல்படுகிறது" என கூறினார்.

    சில நாட்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்குமிடையே வலுவான புதிய உறவுக்கான திட்டங்களில் கையெழுத்திட்டார். இப்பின்னணியில் இந்தியா, ரஷிய-சீனாவுடனான தனது உறவை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதை நிபுணர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

    • 2017-ல் இந்தியா நிரந்த உறுப்பினர் ஆனது
    • இந்திய ஜனாதிபதி தலைமையில் முதல் மாநாடு

    இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-வது உச்சி மாநடாடு ஜூலை 4-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்திய பிரதமர் மோடி அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹியா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநட்டின்போது தொடங்கப்பட்டது. 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகின.

    இந்த அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொகுதி மற்றும் மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

    இந்திய ஜனாதிபதி தலைமையின் கீழ் முதல் முறையாக இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த அமைப்பிற்கான தலைமை செயலகம் பீஜிங்கில் உள்ளது. அங்கு வடிவமைக்கப்பட்டுள்ள நியூ டெல்லி ஹால்-ஐ ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

    ×