சினிமா செய்திகள்

தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் கழிவுகள்.. உண்மை சம்பவத்தை அலசும் அலங்கு திரைப்படம்

Published On 2024-10-16 09:14 GMT   |   Update On 2024-10-16 09:14 GMT
  • அலங்கு திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
  • இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகளில் ஆரம்பித்து விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருவதை தினசரி செய்தியாக பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து 'அலங்கு' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் S.P.சக்திவேல் கூறுகையில், "நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். படத்தின் 95% காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த "செல்ஃபி" திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ள அலங்கு திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் முதல் பிரதியை பார்த்து ரசித்த சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் உலகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமைகளை வாங்கி உள்ளார்.

Tags:    

Similar News