ஜவான் என்னுடைய எல்லைக்கு அழைத்து சென்றது.. ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்த அட்லீ
- இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் முன்னோட்டம் குறித்தும் அட்லீ, பிரியா மற்றும் அவரது குழந்தை குறித்தும் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள அட்லீ, "மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து நிஜமான ஒருவருடன் பயணத்தைத் தொடங்குவது வரை, நான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்கிறேன் என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் என்னுடைய எல்லைக்கு என்னை அழைத்து சென்றது. இந்த பயணத்தில் விலைமதிக்க முடியாத அனுபவங்களைப் பெற்றேன். இதில், சினிமா மீதான உங்கள் ஆர்வத்தையும், கடின உழைப்பையும் கடந்த 3 வருடங்களாக உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு அது மிகப் பெரிய உத்வேகம் அளித்தது. லவ் யூ சார். இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மொத்த படக்குழு சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.