தமிழ்நாடு

ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள்... தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

Published On 2024-01-11 11:24 IST   |   Update On 2024-01-11 11:24:00 IST
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் பல்லுயிர்கள் பாதுகாப்பு, உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னை:

உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை ரூ.1675 கோடி செலவில் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

2023-24ம் ஆண்டு சட்டசபையில் பட்ஜெட் உரையில், பருவநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் மக்கள் தொகையால் ஏற்படும் அழுத்தம் காரணமாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு பணியை உலக வங்கி உதவியுடன் அரசு செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக கடல் அரிப்பை தடுப்பது, கடல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் கடல் பல்லுயிரியலை பாதுகாப்பது ஆகிய நோக்கங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1675 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு இப்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டமானது கடலோர வளங்களை பன்முகப்படுத்துவதன் மூலம் மீள்தன்மை மற்றும் நிலையான பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதோடு, இத்திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்துதல், கடல் பல்லுயிர்கள் பாதுகாப்பு, உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News