தமிழ்நாடு

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும்- சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

Published On 2023-04-06 13:31 IST   |   Update On 2023-04-06 13:31:00 IST
  • காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர முடியுமா? என திருப்பரங்குன்றம் உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
  • சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தில், பொள்ளாச்சி தொகுதி ஆனைமலையில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்பணியுடன் குடமுழுக்கு நடத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 12 ஆண்டுகள் ஆகம விதிப்படி குடமுழுக்கு செய்யப்படாத அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 668 கோவில்களுக்கு இந்தாண்டு திருப்பணி மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருப்பணி ரூ.17 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்' என்றார்.

மேலும், முதற்படை வீடான திருமுருகன் கோவிலில் அமைந்துள்ள குன்றில் உள்ள காசி விஸ்வநாத கோவிலுக்கு பக்தர்கள் மிக உணர்வோடு படிக்கல் ஏறி ஆண்டவனை வணங்கி கொண்டிருக்கிறார்கள்.

அந்த குன்றின் மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர முடியுமா? என திருப்பரங்குன்றம் உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணிகள் குறித்து சாத்தியக்கூறு ஆராயப்பட்டு வருவதாகவும், சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Tags:    

Similar News