தமிழ்நாடு (Tamil Nadu)

தவெக மாநாடு- தொண்டர்கள் அருகில் சென்று விஜய் பேசுவதற்காக பிரமாண்ட நடைமேடை

Published On 2024-10-21 08:17 GMT   |   Update On 2024-10-21 09:43 GMT
  • மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.
  • ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாடு வருகிற 27-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு நடைபெற சில தினங்களே இருப்பதால் மேடை அமைப்பு பணிகள், உணவு கூடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி கள் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.

மாநாடு நடைபெறும் பகுதியில் திடீரென மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல் பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப்பரப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு பணிகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு திடலில் தங்கி இருந்து பார்வையிட்டு வருகிறார்.

மாநாட்டு திடலுக்கு விஜய் வந்ததும் தொண்டர்களை நோக்கி சிறிது தூரம் நடந்து சென்று உற்சாகப்படுத்துகிறார்.

இதையொட்டி 800 மீட்டர் நீளத்துக்கு மாநாட்டு மேடையுடன் சிறப்பு பிரமாண்ட நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதால் ஏற்கனவே 4 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து கூடுதலாக மாநாடு திடல் அருகே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என மொத்தம் 225 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வாகனம் நிறுத்தும் இடங்கள் அனைத்திலும் மின் விளக்கு, குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு வளாகத்தை சுற்றிலும் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு பந்தலை சுற்றிலும் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.

சுமார் 1000 பேர் அமரும் வகையில் மாநாடு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட இருக்கிறது.

மாநாடு பாதுகாப்பில் போலீசாருடன் இணைந்து துபாயில் இருந்து வந்துள்ள சிறப்பு தனியார் பாதுகாப்பு படையினர் ஈடுபட இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு திடல் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.

திடலுக்கு வரும் பணியாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யார் வந்தாலும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாநாட்டுக்கு விஜய் வருவதற்காக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு அவரது பாதுகாப்புக்கு என்று சிறப்பு தனிக்குழுவை துபாய் பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாநாடு பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு மாநாடு பணியை வேகப்படுத்தி வருகிறார்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு- பகலாக மாநாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் 2 நாட்களில் மாநாடு பந்தல் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற இருக்கிறது.

Tags:    

Similar News