
டெல்டாவில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு
- 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
- நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பு ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அறுவடை பணி முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப் பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு நேற்று தஞ்சை வந்தது.
திருச்சியில் இருந்து தஞ்சை வந்த மத்தியக்குழுவில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் பிரிவு உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இவர்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தஞ்சை மண்டல மேலாளர்(பொறுப்பு) கார்த்திகை சாமி, வேளாண்மை இணை இயக்குனர் வித்யா ஆகியோரும் உடன் வந்தனர்.
முதல் கட்டமாக மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள கக்கரையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு உள்ளது? என்பதையும் அதற்கான கருவி மூலம் பரிசோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைத்தொடர்ந்துபுதூர்,தெலுங்கன்குடிக்காடு, புலவன் காடு, பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் பூவாநத்தம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் நிலைய ஊழியர்கள் மத்திய குழுவினரிடம் எடுத்து காண்பித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மத்திய குழுவுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் கலெக்டர் சாருஸ்ரீ உடன் வந்தனர்.
அப்போது விவசாயிகள் கனமழையால் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்ததால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாகவும் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் எடமேலையூர், செருமங்கலம், பைங்காநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதைத் தொடர்ந்து மாலையில் நாகை மாவட்டத்திற்கும் மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.