நெல்லை, தென்காசியில் தொடர் மழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
- தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
- கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இந்தத் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
மேலும் சமவெளி பகுதிகளில் உள்ள தண்ணீரும் இணைந்து தற்போது தாமிரபரணி ஆற்றில் இயல்பை விட அதிகரித்துச் செல்கிறது. எனினும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல நீராடி வருகின்றனர். டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.