தமிழகமெங்கும் குற்றச்செயல்கள் பல மடங்கு அதிகரிப்பு- அண்ணாமலை கண்டனம்
- காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
- வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?
தமிழகமெங்கும் மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிரித்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, முதல் நிலைக் காவலர் முத்துக்குமார், இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனது கட்சியினரின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு, தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்களும், உயிர்ப்பலிகளும்.
இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.