தமிழ்நாடு
அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பால் தி.மு.க. அமைச்சர்களுக்கு காய்ச்சல்: ஆர்.பி.உதயகுமார்

அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பால் தி.மு.க. அமைச்சர்களுக்கு காய்ச்சல்: ஆர்.பி.உதயகுமார்

Published On 2025-03-29 13:35 IST   |   Update On 2025-03-29 13:35:00 IST
  • தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள்.
  • இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.

மதுரை:

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.

கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார்.

நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.

உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது.

தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார். ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது.

தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News