இந்தி மொழிக்கு நடத்தும் கையெழுத்து மூலம் பா.ஜ.க.வின் எதிர்காலம் சூனியமாகும்- செல்வப்பெருந்தகை
- இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
- தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 முதல் 2014 வரை ரூபாய் 675.36 கோடி சமஸ்கிருதத்திற்கும், ரூபாய் 75.05 கோடி தமிழுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஆனால், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிற்கு ரூபாய் 643.84 கோடி மூன்றாண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு பா.ஜ.க. அரசு வழங்கியிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். அண்ணாமலை கூற்றின்படி, சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்த அடிப்படையில், எதற்காக வழங்கப்பட்டது என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.
அதே காலகட்டத்தில் அந்த மூன்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2017-18-ல் ரூபாய் 10.59 கோடி, 2018-19-ல் ரூ. 4.65 கோடி, 2019-20-ரூபாய் 7.7 கோடி என மொத்தம் ரூ. 22.24 கோடி சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. இந்தி மொழிக்கு நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பா.ஜ.க.வின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அது அமையப்போகிறது. பா.ஜ.க.வினர் பெறுகிற கையெழுத்தின் மூலமே அவர்களது எதிர்காலம் சூனியமாகிற சூழல் இன்றைக்கு ஏற்படப் போகிறது.
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.