தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கும் கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை- செல்வப்பெருந்தகை

Published On 2025-01-23 12:12 IST   |   Update On 2025-01-23 12:12:00 IST
  • இருநாட்டு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய-இலங்கை இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.
  • பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கான மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொடுத்தது ராஜதந்திர நடவடிக்கை என்று கூறியிருந்தேன். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தான் ராஜதந்திரமா என்று கேட்டிருக்கிறார். எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுவதுதான் அண்ணாமலையின் அரசியலாக இருக்கிறது.

இந்திய மீனவர்களின் குறிப்பாக, தமிழக மீனவர்களின் பிரச்சனை என்னவெனில், மீன்வளம் மிக அதிகமாக காணப்படும் இலங்கை கடல் எல்லைக்குள் நீண்ட நெடுங்காலமாக மீன்பிடிக்கிற உரிமை சில காலமாக மறுக்கப்படுவது தான். இதனால் இலங்கை கடல் எல்லைக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பிறகு இந்திய அரசு தலையிட்டு விடுவிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பிரச்சனைக்கு முடிவு கட்டுவதற்காக டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அக்டோபர் 26-ந் தேதி 2008-ம் ஆண்டு இருநாட்டு மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்திய-இலங்கை இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் கூட்டு நடவடிக்கைக்குழு அடிக்கடி கூடாத காரணத்தால் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் தமிழக மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், 'கச்சத்தீவு இரு நாடுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1974, 1976-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. அதை இனி மீட்க முடியாது. அப்படி மீட்பதற்காக இலங்கை அரசோடு போரையா தொடுக்க முடியும்?" ஏப்ரல் 1-ல் கூறியதை அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இதன்மூலம் அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 530 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையினரால் ஏலத்திற்கு விடப்பட்டது. ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை அண்ணாமலை விளக்குவாரா?

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிற உரிமை போராட்டத்திற்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது.

அதன்படி மீன் வளம் மிக்க இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் பேசி பெற்றுத் தருவதற்கு அண்ணாமலை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களுக்கான மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும்.

அதைவிடுத்து அரசியல் ஆதாயம் தேடுகிற நோக்கில் அண்ணாமலை தொடர்ந்து பேசுவாரேயானால், தமிழக மீனவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News