தமிழ்நாடு

விஜய் முதலமைச்சராக வேண்டும் - முழங்காலால் மண்டியிட்டு வேளாங்கண்ணியில் வழிபாடு செய்த த.வெ.க. தொண்டர்

Published On 2025-04-03 14:44 IST   |   Update On 2025-04-03 15:05:00 IST
  • கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாகப்பட்டினம்:

வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், தமிழகத்தில் த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே தான் போட்டி என கூறினார். இதனால் த.வெ.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச்சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோடு, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் த.வெ.க. தொண்டர் ஒருவர் கடும் வெயிலில் மணலில் முழங்காலால் மண்டியிட்டு 750 மீட்டர் தூரம் சென்று வழிபாடு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் உள்ள நபர் சென்னை ஆலந்தூர், அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த த.வெ.க. கட்சியை சேர்ந்த தொண்டர் ஆறுமுகம் ஆவார். இவர் வேளாங்கண்ணி புதிய பேராலயத்தில் இருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதை வரை கடும் வெயிலில் முழங்காலால் மண்டியிட்டு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் அப்போது அவர் கையில் த.வெ.க. கட்சிக்கொடியை ஏந்தி சென்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக பிரார்த்தனையும் செய்தார்.

அப்போது ஆறுமுகத்திற்கு சிலர் கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த காட்சிகள் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News