மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஆக உயர்வு
- படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பியது.
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.
இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடந்தன. கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் பிணமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
படுகாயங்களுடன் மீட்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மியான்மரில் நிலநிடுக்கத்துக்கு 140-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளை அகற்ற, அகற்ற உடல்கள் வந்து கொண்டே இருந்தன.
இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-த்தை தாண்டியது. இதுதொடர்பாக இன்று காலை மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
அடுக்குமாடி கட்டிடங்களில் தங்கியிருந்த பலரது நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் மீட்புப் பணிக்கு மத்தியில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.56 மணிக்கு மியான்மரை நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 4.2-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஏற்கனவே பீதியில் இருந்த மக்கள், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். பலர் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இரவு பொழுதை கழித்தனர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச உதவியை ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் கோரியுள்ளார். எந்த வெளிநாட்டு உதவிகளையும் பெற மியான்மர் தயாராக இருப்பதாகவும், நேபிடாவ், மண்டலே மற்றும் சகாயிங் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும் தெரிவித்தார்.
மியான்மரில் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கு அவசர கால சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பேரழிவை கையாளக்கூடிய போதுமான முன்னேற்பாடுகள் அவர்களிடம் இல்லை. மீட்புப்பணிகளில் ராணுவம், செஞ்சிலுவை சங்கங்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 68 பேர் காயம் அடைந்தனர். 101 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் இன்று இயல்புநிலை திரும்பியது.
பாங்காக்கில் பெரும்பாலான மெட்ரோ மற்றும் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதில் சீனாவில் 2 பேர் காயம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து இன்று ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பியது.
ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சி130ஜே விமானம் மியான்மருக்கு புறப்பட்டது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் உள்ளன.
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு அனுப்பப் பட்ட முதல்கட்ட மனிதாபிமான உதவி மியான்மரில் உள்ள யாங்கோன் விமான நிலையத்தை அடைந்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அதேபோல் மியான்மருக்கு உதவிகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மியான்மருக்கு நிவாரணம் திரட்டி வருவதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.