search icon
என் மலர்tooltip icon

    மியான்மர்

    • கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
    • மாயமான 30-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபிடாவ்:

    அண்டை நாடான மியான்மரில் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றி விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

    ஆனால் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

    இந்தநிலையில் தனிந்தரி பிராந்தியம் கியாக் கார் நகரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

    அப்போது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பு மோதல் தீவிரம் அடைந்ததால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல மாறியது. எனவே அங்குள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் உயிருக்கு பயந்து கடல் வழியாக தப்பி ஓட முயன்றனர். அதன்படி 80-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. ஆனால் பாரம் தாங்காமல் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த சம்பவத்தில் 7 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மாயமான 30-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது.
    • யாகி புயல் இந்த ஆண்டின் மிக வலிமையான புயல்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டது.

    நேபிடோவ்:

    தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.

    இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.

    இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

    • புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை.
    • யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது.

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்தநிலையில் யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது. புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    அங்கு சிக்கியுள்ளவர் களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், கிழக்கு ஷான் மாநிலத்திலும், தலைநகரான நய்பிடாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    புயல்-வெள்ளம் காரணமாக சுமார் 2.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளத்தால் 24 பாலங்கள், 375 பள்ளி கட்டிடங்கள், ஒரு புத்த மடாலயம், 5 அணைகள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

    மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளிநாடு உதவ வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு வெளிநாடு களைத் தொடர்பு கொள்ளு மாறு அதிகாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

    • ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியதால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
    • 2020-ல் அதிகாரத்தை கைப்பற்றிய போதிலும் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடியவர் ஆங் சான் சூகி. இவர் பல வருடங்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு 2020 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் 2021 பிப்ரவரியில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. அப்போது அவருக்கு 27 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்போது வீட்டுக்காவில் உள்ளார்.

    இந்த நிலையில் யங்கூன் ஏரிக்கரையில் 1.9 ஏக்கர் நிலத்தில் இவரின் தாயார் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவருடைய மூத்த சசோதரர் உரிமை கொண்டாடினார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது நீதிமன்றம் வீட்டை ஏலத்தில் விட உத்தரவிட்டது. அதற்கான அடிப்படை விலை 142 மில்லியன் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டது.

    இன்று வீடு ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. இதனால் வீடு ஏலம் விடப்படவில்லை. இவ்வாறு நடப்பது இது 2-வது முறையாகும்.

    மியான்மர் சுதந்திர ஹீரோவா கருதப்படும் ஜெனரல் ஆங் சான் இவரது தந்தை. இவர் 1947-ல் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆங் சான் மனைவி (சூகி தாயார்) கின் கி-க்கு இந்த வீடு அரசால் வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் கால ஸ்டைலில் இரண்டு மாடி வீடாகும்.

    இந்த வீட்டில் ஆங் சான் சூகி 15 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிங்டன், ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் ஆகியோர் இந்த வீட்டிற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆங் சான் சூகி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.

    • மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்
    • தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள் சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

    ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில் இருந்து சிறுபான்மை மக்களான ரோகிங்கியாமுஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மத ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் அதிகமானோர் வங்காள தேசத்தில் குடியேறி வருகின்றனர்.

     

    2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தப்பி சென்றுள்ளனர். மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

    இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள்  சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

    இதில் உயிர் தப்பிய 3 பேர் கூறும்போது, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மியான்மாரில் இருந்து முஸ்லிம் சிறுபான்மையினரான ரோகிங்கியாக்கள் படகுகளில் தப்பிச் சென்றபோது, நப் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை வங்காளதேச ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
    • மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.

    தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

    மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    • மியான்மரின் வடக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • 30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.

    மியான்மரின் வடக்கு மாநிலமான கச்சினில் ஐராவதி ஆறு ஒடுகிறது. கனமழையால் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் உயிரிழந்தோர் விவரம் தெரியவில்லை. ஆனால் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது கச்சின் மாநில அரசு தெரிவித்துள்ளது.

    30 பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் தற்காலிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. மியீச்சினா மற்றும் வைமாவ் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

    மியீச்சினாவில் ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி 5 அடிக்கு மேல் செல்வதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரண்டு அடி உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார்.
    • ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூகி. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அவர் கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இருப்பினும் கிளர்ச்சியாளர்களால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே ஆங் சான் சூகிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்பட 3300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது என ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
    • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.

    போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

    இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.

    தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.

    2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 முதல் ஆயுதமேந்திய பூர்வ குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் போர் நடக்கிறது
    • தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

    இந்தியாவின் அண்டையில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மியான்மர் (முன்னர் பர்மா). இதன் தலைநகரம் நேபிடா (Naypyidaw).

    2021 பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வர கோரும் உள்நாட்டு அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2023 அக்டோபர் முதல் ஆயுதமேந்திய அந்நாட்டு பூர்வ குடிமக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் போரில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

    மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    மியான்மரில் உள்ள ராக்கைன் (Rakhine) மாநிலத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பல வருடங்களாக மியான்மருக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை (Ministry of External Affairs), ராக்கைன் மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    ராக்கைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால், அங்கு இந்தியர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படலாம். மேலும் அங்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்கு பயணிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மாநிலத்தில் தற்போது உள்ள இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வன்முறை அதிகரித்ததால், கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியுறவு துறை இது குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×