என் மலர்


டெக்ஸ்டர்
சிறுவயதில் நடந்த அவமானத்தை பெரிய வயதில் பழி தீர்க்கும் ஒருவனின் கதை.
கதைக்களம்
நாயகன் ராஜீவ் கோவிந்த்தும் நாயகி யுக்தா பெர்வியும் காதலிக்கிறார்கள். மிகவும் கோவக்காரரான ராஜீவ் கோவிந்த், யுக்தா மீது அளவுகடந்த காதலை வைக்கிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவரால் யுக்தா கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதை தாங்க முடியாமல் தவிக்கும் ராஜீவ் கோவிந்த் போதைக்கு அடிமையாகி உயிரிழக்கும் நிலைக்கு செல்கிறார்.
இவரது நண்பர், ராஜீவ் கோவிந்த்தை காப்பாற்றி பழைய நினைவுகளை அழிக்கும் சிகிச்சை கொடுக்கிறார். அதன்பின் புதிய மனிதராக மாறும் ராஜீவ் கோவிந்த், மற்றொரு நாயகியான சித்தாரா விஜயனுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் சகோதர பாசத்தில் பழகுகிறார். சித்தாராவையும் அந்த மர்ம நபர் கடத்த நினைக்கிறார்.
இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக பெண்களை கடத்தி கொலை செய்கிறார்? ராஜீவ் கோவிந்த்துக்கும் மர்ம நபருக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ராஜீவ் கோவிந்த் சண்டை, ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். வில்லனாக நடித்து இருக்கும் அபிஷேக் ஜார்ஜ் நடிப்பால் மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகியாக வரும் யுக்தா பெர்வி, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் சித்தாரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். ஹரிஷ் பெராடிக்கு ஓவர் பில்டப் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு காட்சிகள் வைக்காதது வருத்தம்.
இயக்கம்
சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனாக மாறிய பிறகு பழிவாங்கும் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சூரியன். ஆரம்பத்தில் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்க, இறுதியில் தெளிவாக புரியவைத்து இருக்கிறார்.
இசை
ஶ்ரீநாத் விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
தயாரிப்பு
Ram Entertainerss நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது