search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொள்ளிடம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    மடவாமேடு கிராம பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் மீனவர்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
    • இன்னும் 2,3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாயம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர மீனவ கிராமமான மடவாமேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

    இங்குள்ள மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடித்து இங்கு பிடிக்கப்பட்டு வரும் மீன்கள் வெளியூர்களிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கிருந்து பல வகையான மீன்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் இங்கு உலர வைக்கப்படும் பல வகையான மீன்களின் கருவாடுகளும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

    உள்ளூர் பகுதிக ளிலும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு உணவுக்கு பயன்படுத்தப்பட முடியாத சிறு, சிறு வகையிலான நூற்றுக்கணக்கான வகை மீன்கள் காயவைத்து உலர வைக்கப்பட்டு கோழி தீவனத்துக்காக நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    இப்படி மீன் மற்றும் கருவாடு வியாபாரங்களில் சிறந்த விளங்கி வரும் இந்த கிராம மக்கள் தினந்தோறும் கடல் அலைகளின் சத்தத்தால் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இங்கு கடல் சீற்றத்தால் அலைகள் எழும்பி கடல் நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் மீனவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படும்போதெல்லாம் மடவாமேடு கடல் பகுதி மண் அரிப்பால் கடலுக்குள் கரைந்து சென்று கொண்டே இருக்கிறது. கடந்த 5 வருட காலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மடவாமேடு கிராமப்பகுதி கடலுக்குள் சென்று விட்டது. இதனால் இந்த கிராமத்திலிருந்து கடல் அலை தொட்டுச் செல்லும் தூரம் வெறும் 50 மீட்டர் தூரமே உள்ளது.

    தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து வரும்போதெல்லாம் மடவாமேடு கிராமத்தின் மண்ணை அரித்து செல்கின்றது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் மடவாமேடு கிராமமே கடலுக்குள் சென்று விடும் அபாய நிலையில் உள்ளது.

    எனவே மடவா மேடு கிராமத்தில் மேலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் அலைகள் வந்து மோதும் இடத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாறாங்கற்களை போட்டு தடுப்புச் சுவர் அமைத்தும் வேகமான மண் அரிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும் ஒன்றிய குழு உறுப்பினருமான அங்குதன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×