search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
    • போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோகிலா. இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி கோகிலாவும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய மர்ம நபர் அனுப்பிய படிவத்தை நிரப்பி அனுப்பியுள்ளார். பின்னர் பெங்களூருவில் உள்ள குளோபல் சாப்டவேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கோகிலாவை தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் ஆட்டோ மெட்டிக் ரோபோடிக் சாப்ட்வேர் மூலம் டிரேடிங் செய்து சம்பாதிக்கலாம் என கூறியுள்ளது.

    இதை நம்பி கோகிலா கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.18 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து கோகிலா, கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தலைமையின் கீழ் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கடந்த 2 மாதங்களாக பல்வேறு இணைய வழி தொழில் நுட்ப உதவியுடன் பணம் பரிவர்த்தனை, வாடஸ்-அப் மற்றும் இணையதளத்தில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் பெங்களூரு மற்றும் நெய்வேலியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை பெங்களூரு விரைந்தது. இந்நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த தூபைல் அகமது, பிரவீன், முகமது அன்சார், நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஷ், ராமச்சந்திரன். பிரேம் ஆனந்த், விமல் ராஜ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை, புதுச்சேரிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், துபாயை தலைமை இடமாக கொண்டு குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தெரியவந்தது.

    இந்தியா. ஹாங்காங், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கால் சென்டர்கள் அமைத்து, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி மோசடி செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதில் பணிபுரிந்த அனைவரும் பொது மக்களை ஏமாற்றுவது தெரிந்தே வேலை செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு நெய்வேவியை சேர்ந்த நவ்ஷத் கான் அகமது என்பவர் தலைவராக இருந்துள்ளார். அவருடைய மனைவி சவுமியா, நாமக்கல்லில் உள்ள கால் சென்டருக்கு உரிமையாளராக இருந்துள்ளார். இதில் தொடர்புடைய மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேர் தற்போது துபாயில் உள்ளனர்.

    பொதுமக்களை ஏமாற்ற பயன்படுத்திய கால் சென்டர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தில் இயங்கவில்லை என்றும், அவர்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு இன்டர்நெட்டை (வி.பி.என்.) பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மேலும் பொதுமக்களை ஏமாற்றிய பணத்தில் பெங்களூருவில் சொகுசு பங்களா, ஏற்காடு, புதுச்சேரி மற்றும் ஆரோவில், கொடைக்கானலில் ரிசார்ட் வாங்கி உள்ளனர். இந்தியாவில் மட்டும் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். அந்த சொத்துக்களை போலீசார் முடக்கம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 4 சொகுசு கார், 1 பைக், வேன், 100-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஊழியர்களின் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவர்களிடம் இருந்து 3 வங்கி கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் ரூ.56 கோடி மோசடி செய்யப்பட்ட பணம் வந்துள்ளது. இதில் ரூ.27 கோடி உள்ள ஒரு வங்கி கணக்கை மட்டும், இந்தியா முழுவதும் உள்ள இணையவழி போலீசார் முடக்கி உள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அனைத்து மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவர்கள் இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 1,57,346 நபர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளனர். அதில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். தொடர்ந்து, அங்கு பணி புரிந்த ஊழியர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேலும் மோசடி கும்பலின் தலைவன் நவ்ஷத் கான் அகமது மற்றும் கூட்டாளிகளை கைது செய்ய புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். விரைவில் அவர்கள் உதவியுடன் துபாயில் பதுங்கியுள்ள நவ்ஷத் கான் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே 2014-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பா.ம.க. தலைவர்களை விமர்சித்து பேசினார்.

    கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த விசாரணையின்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு 2-வது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரண்டு பிறப்பித்தார்.

    இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

    • கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
    • மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்சன் மகாலில் இன்று கடலூர் தி.மு.க. கவுன்சிலர் கே.ஜி.எஸ்.டி. சரத் திருமணம் நடந்தது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்கள் அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கினர். தொடர்ந்து தி.மு.க. இளைஞரணிக்கு ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர்.

    மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தம்பி சரத், நிவேதா திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சரத் இளைஞரணியை சேர்ந்தவர். அவரின் தந்தையும் இளைஞரணியில் பணியாற்றியவர். திருமண விழா கழக நிகழ்ச்சிபோல எழுச்சியுடன் நடக்கிறது.

    திராவிட இயக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். கழகத்தின் முதல் பொருளாளர் நீலமேகத்தின் கொள்ளு பேரன் சரத். அவர் மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர். அதனால்தான் 23 வயதிலேயே கடலூர் நகராட்சி மாமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    இளைஞரணி மாநகர துணை அமைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர, படிப்பதற்கு உரிமை இல்லை. இன்று ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பெண்கள் வந்துள்ளனர். பெண்கள் ஆண்களை விட அதிகமாக வெளிநாடு சென்று படிக்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டுவந்தது தி.மு.க. பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவந்தவர் கலைஞர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

     


    ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டில் 520 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.ஆயிரம் வரை இத்திட்டத்தால் சேமிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை தி.மு.க. அரசு வழங்குகிறது.

    இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ரூ.1,000 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். காலையில் மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை பெற்று பயனடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்து வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும், முதல் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பணிக்கு செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

    இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும், பெண்களும் தமிழக அரசின் சாதனைகளை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசின் தூதுவர்களாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் இருவரும், பெரியாரும், பகுத்தறிவும் போல, அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல, கலைஞரும், தி.மு.க.வும்போல, கழக தலைவரும், தமிழக மக்களும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. க்கள் ரவிக்குமார், கவுதம சிகாமணி, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
    • குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    மின்துறையின் வரவு - செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும்.

    ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும்.

    ஜூன் மாதம் முதல் உயர்வு இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.

    ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் நடந்ததால் மின் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல், அதாவது 2 மாதம் முன்கூட்டியே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ. 1.45 ஆக இருந்தது. அது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.

    100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான்கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

    வர்த்தகபயனபட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கான நிலைக்கட் டணமானது கிலோவாட் டுக்கு ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6ஆகஉயர்ந்துள்ளது. அவர்களுக்கான நிலைக் கட்டணம் ரூ. 420-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

    சிறு விவசாயிகளுக்கான நிலைக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75- லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    குறைந்த மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.35-லிருந்து ரூ.7 ஆகவும், உயர்மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.45-லிருந்து ரூ.6.00 ஆகவும், நிலைக்கட்டணங்களும் கிலோவாட்டுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

    • 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர்.
    • கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 414 பேருக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவு வெளியானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, இடமாற்றம் உத்தரவு வெளியிட்ட தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் அறிவித்தார்.

    இடமாற்றம் உத்தரவு மற்றும் நிறுத்தி வைப்பு உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போலீஸ் டி.ஜி.பி.யின் அனுமதி இன்றி இடமாற்றம் உத்தரவு வெளியானது எனவும், உள்துறை அமைச்சர் அனுமதி பெறாமல் வெளியான பட்டியல் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக போலீசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இதுமட்டும் இன்றி, மணவெளி தொகுதியைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றப்பத்திரிக்கையில் ஒருவர் பெயரை நீக்கியதற்காக போலீஸ் சூப்பிரண்டின் கோபத்திற்கு ஆளாகி கட்டாய விடுப்பில் சென்றார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் வெளியானது.

    பெண் சப்-இன்ஸ்பெக்டரை மாற்ற கூடாது என கடந்த வாரம் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து உத்தரவு சென்றது. அதை மீறி இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த உத்தரவு நிறுத்தப்பட்டதாகவும் போலீசார் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பிற்கு இடையே இறந்து போன போலீசார், போலீசில் இருந்து வெளியேறி மாற்று அரசு பணிக்கு சென்றவர்களுக்கும் இடமாற்றம் உத்தரவு வெளியானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    சமீபத்தில் வில்லியனுாரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் இடம்பெற்று இருந்தது.

    அதுபோல் 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர். அவர்களது பெயரும் இடமாற்ற உத்தரவில் இருந்தது. கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால் இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

    • அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
    • கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

    புதுச்சேரி:

    தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

    இதே போல் ஆந்திராவில் அங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். தெலுங்கு நாட்காட்டிபடி சிரவண மாதம் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ந் தேதி முடிகிறது. இந்த நாட்களில் அங்குள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய்,20 ரூபாய், 10 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான நோட்டுக்களால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    12 ஆண்டுகளாக இதே பகுதியை சேர்ந்த வனக்கால நரேந்திரா என்ற பக்தர் அம்மனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து கடைசி நாளில் பக்தர்களுக்கு அந்த நோட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.

    இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.

    அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    • அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • ஜிப்மர் டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுவை ஜிப்மரில் பணிபுரியும் டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். டாக்டர்களின் இந்த தொடர் போராட்டத்தால் வெளிபுற சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்படி சுப்ரீம்கோர்ட்டு டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் ஜிப்மர் டாக்டர்கள் நேற்று மாலை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதையடுத்து ஜிப்மரில் உள்ள அனைத்து புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் சி.டி., எம்.ஆர்., ஸ்கேன் சேவைகள் அனைத்து சேவை பிரிவுகளும் முழுமையாக இயங்கும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்தார்.

    இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஜிப்மரில் அனைத்து மருத்துவ சேவைகளும் வழக்கம் போல இயங்கின.

    • சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
    • ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின்போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின்போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.

    மேலும், உறக்கத்தின்போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்.

    • அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
    • லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.

    மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.

    ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.

    பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.

    • பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
    • அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

    புதுச்சேரி :

    புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.

    இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.

    இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.

    அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.

    நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×