என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம்.
    • மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்.

    தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

    அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-

    ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

    தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடந்த 2 நாட்களாக ஆதிநாராயணன் பணிக்கு செல்லவில்லை.
    • போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ஆதி நாராயணன் (51).

    இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாதவர். அவரது பெற்றோர் இருவரும் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து போனார்கள். இதனால் டாக்டர் ஆதிநாராயணன் தனிமையில் வசித்து வந்தார். அவரது உறவினர்கள், பெங்களூருவில் வசிக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆதிநாராயணன் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜிப்மர் நிர்வாகம் ஆதிநாராயணன் வசித்து வந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிக்கு தகவல் தெரிவித்து அவரது வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கேட்டுக்கொண்டனர்.

    அதன்பேரில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி கோவிந்தராஜுலு, டாக்டர் ஆதிநாராயணன் வீட்டுக்கு அக்கம் பக்கத்தினருடன் சென்று பார்த்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் டாக்டர் ஆதிநாராயணன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அவரது உடல் அருகில் சில ஊசிகளும், குளுக்கோஸ் ட்ரிப்ஸ் ஏற்றும் உபகரணங்கள் கிடந்தன. இடது கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருந்தது.

    பெற்றோர் அடுத்தடுத்து இறந்து போனதால் தனிமையில் வசித்து வந்த டாக்டர் ஆதிநாராயணன் விரக்தியில் விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
    • நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.

    புதுச்சேரி:

    பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

    அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

    தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.

    தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.

    • ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிகாலையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 60-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு தினந்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அவர்கள் புதுச்சேரி கடற்கரை அழகை ரசிப்பது வழக்கம்.

    இதற்கிடையே புதுச்சேரி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளை வாலிபர்கள் கேலி கிண்டல் செய்து ரகளையில் ஈடுபடுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு புகார் வந்தது.

    போலீஸ் சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள டூயூப்ளக்ஸ் சிலை அருகே மதுபோதையில் 3 வாலிபர்கள் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

    இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 27), ராமநாதபுரம் அடுதாகுடியை சேர்ந்த முகேஷ் (26), புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் கடற்கரை சாலையில் சீகல்ஸ் ஓட்டல் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பிரசாத் (30), புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த கருப்பையா (29) ஆகியோரை கைது செய்தனர்.

    • நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

    இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.

    18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.

    குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.
    • சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பா.ஜ.க. சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

    அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    உமாசங்கரின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை 4 முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.

    உமாசங்கர் புகாருக்கு லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது. போலீசாரிடமும், முதலமைச்சரிடமும் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    இதில் புதுச்சேரி போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் தலையீட்டால், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகள் வைத்து வழக்கை பூசிமுழுக பார்க்கிறார்கள். இந்த சூழல் தொடர்ந்தால் அரசியல் தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் நடமாடமுடியாது.

    பா.ஜ.க.வில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு உள்துறை அமைச்சரை பதவிவிலக கோரினோம். தற்போது நடந்த கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்.

    போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை. கவர்னர் கைலாஷ்நாதன் இதில் தலையிட்டு சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கவர்னரை சந்திப்போம்.

    உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு பா.ஜ.க. சென்றார். பா.ஜ.க. யார் வேலை செய்கிறார்களோ, வேட்பாளராக முயற்சிக்கிறார்களோ அவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அத்துடன் நிலப்பின்னணி பெரியளவில் இருக்கிறது.

    சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும். இல்லாவிட்டால் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் வழக்கை முடித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    • ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
    • பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமி வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் விடுதிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.

    இமெயில் மூலம் மிரட்டல் விடுபவர் யார்? என்பதை கண்டறிவது சவாலாக உருவெடுத்துள்ளது. புதுவை சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரமை் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.

    மிரட்டல் புரளி என்றாலும், தொடர்ந்து போலீசார் மிரட்டல் வரும் இடங்களுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.

    இதையடுத்து கோரிமேடு போலீசார் திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கும் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் ஜிப்மரில் சோதனை நடத்தினர்.

    இதேபோல பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கும் நபரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
    • லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

    பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

    இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.

    இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சாமி பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது38). பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் துணைத்தலைவரான இவர் தற்போது காமராஜர் நகர் பா.ஜ.க. பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில் இன்று (27-ந் தேதி) தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அவரது பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை உமா சங்கர் கவனித்து வந்தார்.

    நேற்று இரவு கருவடிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்து வரும் பிறந்த நாள் விழா பணிகளை பார்த்து விட்டு இரவு 11.30 மணியளவில் வெளியே வந்தார்.

    அப்போது அங்கு 5 பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை சுற்றி வளைத்தது. இதனை கண்ட உமாசங்கர் தன்னை தீர்த்து கட்ட கும்பல் வந்துள்ளதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓடஓட விரட்டி உமாசங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உமாசங்கர் இறந்து போனதை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    தகவலறிந்து அங்கு வந்த உமாசங்கரின் தாய், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த உமாசங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையில் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் உடலை எடுக்கக்கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின்னரே நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    • பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
    • ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். இதன்பின்னர் பேசிய திருமாவளவன்,

    திமுகவில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள். பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.

    இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜயுடன், புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன். அவருடைய மனது நம்முடன் இருக்கும் என்று அப்போது விஜய் கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்றார்.

    ×