என் மலர்
விளையாட்டு

மும்பையில் 20-ந்தேதி ஆலோசனை: 10 ஐ.பி.எல். கேப்டன்களுக்கும் கிரிக்கெட் வாரியம் அழைப்பு
- புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
- மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் போட்டோஷூட் நடைபெறும்.
18-வது சீசனுக்காக ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டி தொடங்குவதற்கு 2 தினங்களுக்கு முன்பு 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆலோசனை நடத்துகிறது.
இதற்காக 10 அணிகளின் கேப்டன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வருகிற 22-ந்தேதி மும்பையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதே போன்று 10 அணிகளின் உரிமையாளர்களின் மேலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு பிறகு 10 அணிகளின் கேப்டன்களுடன் போட்டோஷூட் நடத்தப்படும். மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் இந்த போட்டோஷூட் நடைபெறும்.
இந்த சீசனில் 5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரகானே (கொல்கத்தா), ரஜத் படிதார் (பெங்களூரு), ரிஷப்பண்ட் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (பஞ்சாப்) அக்ஷர் படேல் (டெல்லி), ஆகியோர் அந்த அணிகளின் புதிய கேப்டன்கள் ஆவார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை), கம்மின்ஸ் (ஐதராபாத்) சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான்), ஹர்திக் பாண்ட்யா (மும்பை), சுப் மன்கில் (குஜராத்) ஆகியோர் அந்தந்த அணிகளின் கேப்டன்களாக நீடிக்கிறார்கள்.