என் மலர்tooltip icon

    உலகம்

    இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிப்போம்- புதின் சூளுரை
    X

    இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிப்போம்- புதின் சூளுரை

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    Next Story
    ×