search icon
என் மலர்tooltip icon

    மற்றவை

    • ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.
    • அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.

    இரண்டாம் உலகப்போரின் போது இது நிகழ்ந்தது.

    போரிட நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள்.

    அதனால் எல்லா வகையான ஆட்களும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

    தாய் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும்.

    தந்தை நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று பல தளங்களில் தலைவர்களும் தளபதிகளும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அந்த அமளியில் ஒரு தத்துவப் பேராசிரியரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

    முதல்நாள் வீரர்கள் மைதானத்தில் கூடினார்கள்.

    ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.

    அட்டென்ஷன்...

    அபௌட்டார்ன்....

    லெப்ட்...

    ரைட்....

    லெப்ட்..

    ரைட்...

    அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.

    மிகவும் கோபமாக அந்த சிப்பாயிடம் கேட்டார், நீ என்ன செய்கிறாய்?

    முதலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் நன்றாக முடிவு செய்து விட்டு பிறகு வா.

    முதலில் இப்படி போ என்கிறாய்.. பிறகு அப்படி போ என்கிறாய்..

    நில் என்கிறாய்... போ என்கிறாய்...

    வலது பக்கம் போ என்கிறாய்.. இடது பக்கம் போ என்கிறாய்...

    இது என்ன கூத்து..?

    உருப்படியாக ஏதாவது ஒன்றை தீர்மானம் செய்து வை..

    அதுவரை நான் போய் ஒரு காப்பியை அருந்திவிட்டு வருகிறேன்.

    வந்தவுடன் நீ சொன்னதை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..

    -ஓஷோ

    • முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள்.
    • இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன்.

    உங்கள் வாழ்வு வளமாக நலமாக ஓர்சூட்சமம் இருக்கு ...

    அது எதையும் எப்போதும் வாழ்த்துவது தான் !

    ஓர் செடியை பார்த்தால் அது செழித்து வளர வேண்டும் என்று வாழ்த்துகள் ..

    ஓர் சிற்றுயிரை கண்டால் அதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள் ..

    ஓர் நோயாளியை கண்டால் சீக்கிரம் பூரண குணமடைய வாழ்த்துகள் ..

    பள்ளி செல்லும் குழந்தைகளை கண்டால் நன்று படித்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று வாழ்த்துகள் ..

    சிறு வியாபாரிகளை கண்டால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகள்..

    பெரிய தனவந்தர்களை கண்டால் பலருக்கும் உதவ வேண்டும் என்று வாழ்த்துகள் ..

    ஏமாற்றுபவர்களை கண்டால் அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று வாழ்த்துகள் ..

    அரசியல்வாதிகளை கண்டால் அவர்கள் பொய் கடந்து மெய்யாய் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்றே வாழ்த்துகள் ..

    உங்கள் சக உறவுகளை கண்டால் மேன்மேலும் முன்னேறட்டும் என்றே வாழ்த்துகள...

    உங்கள் நட்புகளை கண்டால் சிறப்புற வாழவேண்டும் என்றே வாழ்த்துகள்..

    அந்த வாழ்த்தும், உங்களை உள்ளும் புறமுமாய் வாழ்விக்கும் இறையை முன்னிறுத்தி வாழ்த்துகள் ..

    வாழ்த்த வயது இல்லை என்று பொய் சொல்லாதீர்கள் ! நம் பிறப்பின் மறு சுழற்சியில் அவர்களோடு வயதில் ஒத்தவர்கள் தான் என்று மெய்யை உணர்ந்து வாழ்த்துகள்..

    நீங்கள் வாழ்த்துவது வார்த்தையாக உங்கள் வாய் வழியே வந்து அதை வாழ்த்து பெறுபவர் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. மனதில் நினைத்தாலே போதும்!

    முதலில் உங்களை நீங்களே உளமார வாழ்த்தி கொள்ளுங்கள். "நான் நலமாய், வளமாய் இருக்கிறேன்.. . என்னோடு உட்கலந்து இருக்கும் இறைவனின் பரிபூரண ஆசி என்றும் என்னிடம் உள்ளது. அது என்னை மென்மேலும் சிறப்புற வளமுற நலமுற வாழ்வித்து கொண்டே இருக்கும். இன்றும் இந்த நாளில் நான் மேன்மை அடையக்கூடிய நிகழ்வுகளையே எதிர்கொள்ள போகிறேன் ! " என்று காலை எழுந்தவுடன் முதல் வாழ்த்து உங்களிடமிருந்து தொடங்கட்டும்.

    அது பார்ப்பது.. கேட்பது.. உணர்வது.. போன்ற அனைத்திற்கும் உங்கள் உள்ளத்தின் குரலாக பரவட்டும்.

    எதை கொடுத்தாலும் வாழ்த்தி கொடுங்கள் !

    எதை பெற்றாலும் வாழ்த்தியே பெறுங்கள் !!

    எதை நினைத்தாலும் வாழ்த்தியே நினையுங்கள்!

    அப்புறம் பாருங்கள் .. உங்கள் வாழ்வே மிகப்பெரிய, வெளியே சொல்லி விவரிக்க முடியாத ஆனந்த உணர்வில் திழைக்கும்!

    எது நடந்தாலும் அதை இறையருளாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் உங்களிடம் இருந்து வெளிப்பட துவங்கும் !!

    உங்கள் உடலை சுற்றி உள்ள ஒளியுடல் பிரகாசம் ஆகும்! உங்கள் முகமே ஓர் தேஜஸுடன் ஒளிவீசும் !!

    உங்களை சுற்றி என்ன எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் அது உங்களை தாக்காது, உங்களின் சுற்றத்தையே நேர்மறையாக மாற்றும் ..

    எதனிடமும் அன்பே மிளிரும் ! கருணையே ஒளிரும் !!

    -வான் கடந்தான்

    • மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும்.
    • அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது.

    கோவில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

    அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

    உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

    இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

    இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

    இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

    -.அருணாசலம் ஆச்சாரி.

    • பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்.
    • அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல.

    அட்சய திருதியை என்பது சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் அமைப்பு.

    அமாவாசை முடிந்து 3வது திதியில் செய்த ஒன்று பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும்.!

    ஏன் என்றால் திதி தான் செல்வநிலையை குறிப்பது...

    இந்த திதியில் என்ன கொடுத்தாலும் அது உங்கள் கடைசி பரம்பரை வரை தொடர்ந்து வரும்..!

    கொடுத்தால் மட்டுமே பெருகும்...!

    அட்சய பாத்திரம் தர்மனுக்கும் மணிமேகலைக்கும் தான் கொடுக்கப்பட்டது

    காரணம், சாப்பாடு ஒன்றுக்காகவே!

    பசி என்று யார் வந்தாலும் பசித்த வயிறுக்கு அறுசுவை உணவை பரிமாற தானே தவிர

    தங்கம் வேணும் னு கேட்டு வந்தவர்களுக்கு கொடுக்க அல்ல,,

    தங்கம் வேணும் னு நினைத்துக்கொண்டு கையை உள்ளே விட்டால் தங்கம் வராது...!

    உணவுக்காக மட்டுமே தான் அது உருவாக்கப்பட்டது.

    பாண்டர்வர்கள் வனவாசம் சென்ற போது சூரிய பகவானை வழிப்பட்டு தர்மர் அட்சய பாத்திரம் பெற்றார்..அதை வைத்து தான் வனவாசத்தை முடித்தனர்..!

    எவ்வளவு கடுமையான மழையோ வெயிலோ பயிர்கள் விளையாத போதோ தன் நாட்டு மக்கள் பசியில் தூங்கிட கூடாது என்பதற்காக மணிமேகலை தவம் இருந்து பெற்றது..

    அட்சய பாத்திரம் என்பது கொடுப்பதற்காவே தானே தவிர வாங்குவதற்கு அல்ல..

    அள்ள அள்ள குறையாத அறுசுவை உணவை தரும் சக்தி கொண்டது.!

    பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வயிறு நிறைய அறுசுவை உணவை மணிமேகலை கொடுத்தார்..!

    அட்சய திருதியை திதி அன்று உணவு பொருட்களை மற்றவர்களுக்கு வாங்கி கொடுங்கள்...!

    அரிசி உப்பு பருப்பு நெய் காய்கறிகள் என எது உங்களால் வாங்கி தர முடியுமோ அதை வாங்கி கொடுங்கள்

    அன்று கொடுப்பதால் கொடுத்துகொண்டே இருக்கும் நிலை வரும்..!

    திருதியை திதி அன்று என்ன கொடுத்தாலும் அது பெருகும்..!

    மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகவே உங்களுக்கு கொடுக்கப்படும்..!

    ஒவ்வொரு தமிழ் மாத வளர்பிறை திருதியை அன்று என்ன கொடுத்தாலும் பெருகும்..அதை தான் மூன்றாம் பிறை என்று சொல்லி வழிபடுகிறார்கள்..!

    பார்க்கவும் சொல்கின்றீர்கள்..!

    3-ம் பிறையில் கொடுத்தால் பெருகும்...!

    வேண்டும் என்றால் முயற்சி செய்து பாருங்கள் அதன் சக்தி புரியும்..!

    -மணிகண்டன்

    • கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.
    • பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

    ஒரு நாள் மாலை கலைவாணர் தம் நண்பர்கள் ப. ஜீவானந்தம், தென்காசி சண்முகசுந்தரப் புலவர் ஆகியோருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

    "ஆமாம்.. சம்பாதிக்கிறீர்கள், சடுதியில் செலவு செய்து விடுகிறீர்களே! ஊராருக்கெல்லாம் உதவும் தாங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா?" பேச்சுக்கு இடையே சண்முகசுந்தரப் புலவர் கேட்ட கேள்வி இது.

    அதற்குப் பதிலாக கலைவாணர் ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்..

    ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து, வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

    இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

    மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

    உடனே அந்த இளைஞர் கேட்டார். எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்?

    மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்? என்று அவர் கூறியவுடன் மனைவி, நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?

    உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலளித்தார்.

    கதையை முடித்த கலைவாணர் தொடர்ந்தார், "நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா? அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே!" என்றார்.

    -சந்திரன் வீராசாமி

    • இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.
    • சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.

    பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.

    இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.

    பூமத்திய ரேகைக் கோட்டுப் பகுதியில் உலகில் மொத்தம் 14 நாடுகளும், பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் அமைந்துள்ளன.

    இங்கு காலநிலை மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் கொண்டு இருக்கிறது.

    பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் விட்டம் 12,756 கிலோ மீட்டராகவும், துருவப்பகுதியில் 12,714 கிலோ மீட்டராகவும் ஆராய்ச்சியாளர்களால் அளவிடப்பட்டுள்ளது.

    பூமியின் சுழற்சி வேகம் நிலநடுக் கோட்டில் மணிக்கு 1670 கிலோ மீட்டராக உள்ளது. அதே நேரத்தில் துருவப் பகுதிகளில் அதனுடைய சுழற்சி வேகம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் கிலோ மீட்டராக உள்ளது.

    பூமத்திய ரேகைப் பகுதியில் காலநிலை குறைந்தளவு வித்தியாசத்துடன் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இங்கு சூரியனின் கதிர்கள் நேராக விழுவதால் மிகுந்த வெப்பமும் அதிக மழைப்பொழிவும் நிகழ்கிறது.

    இதனால் இப்பகுதியில் உலகின் மழைக்காடுகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு அமேசான் மழைக்காடுகள், காங்கோ மழைக்காடுகள், தென்கிழக்காசிய மழைக்காடுகள் ஆகியவற்றைக் கூறலாம்.

    உலகின் மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு ஆண்டு முழுவதும் பகல் பொழுது 12 மணி நேரமாகவும், இரவுப் பொழுது 12 மணி நேரமாகவும் சமமாக இருக்கிறது.

    மேலும் இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம் நிகழ்வுகள் ஒருசில நிமிடங்களே நிகழ்கின்றன. காரணம் ஆண்டின் பெரும்பகுதி சூரியன் இங்கு அடிவானத்திற்கு கிட்டதட்ட செங்குத்தாக நகருவதே ஆகும்.

    -அருண் நாகலிங்கம்

    • ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை.
    • கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது.

    உலகின் மிகப்பெரிய தீவாக அடையாளம் காணப்பட்டுள்ளது கிரீன்லாந்து. பூமியின் வடதுருவத்துக்கு மிக அருகே, 59 டிகிரி முதல் 83 டிகிரி அட்சரேகை வரை பரந்து விரிந்துள்ளது கிரீன்லாந்து. இதன் நிலப்பரப்பு இந்தியாவின் முக்கால் பகுதி அளவுக்கு இருக்கும். மக்கள் தொகை 56,000 தான். தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட பெரிய நிலப்பரப்பில் 56,000 பேர் வசிப்பதை கற்பனை செய்ய முடிந்தால் அது தான் கிரீன்லாந்து.

    ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம், கிரீன்லாந்து முழுக்க பரவி இருக்கும் பனிப்பாறை. இந்த பனிப்படலம் சுமார் 17,10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கிரீன்லாந்தின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை மூடுகிறது! சராசரியாக இந்த பனிப்பாறை 1.6 கிலோமீட்டர் தடிமன் இருந்தாலும், சில இடங்களில் 3 கிலோமீட்டர் வரை தடிமன் இருக்கும்.

    இந்த பனிப்படலம் முழுக்க நல்ல குடிநீரால் ஆனதுதான். ஆனால் இது மட்டும் உருகினால், உலகமே அழிந்துவிடும் என்கிறார்கள். அந்த அளவு தன்ணீர் இதில் உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக உலக கடல் மட்டம் 25 அடி வரை உயரும் அளவு நீர் கிரீன்லாந்து பனிப்பாறையில் தேங்கியுள்ளதாம்.

    உலக நாடுகளின் கடற்கரையோர நகரங்கள், மாநிலங்கள் எதுவுமே அதன்பின் இருக்காதாம். தவிர கிரீன்லாந்தின் பனிப்படலம் மீது சூரிய ஒளி படும்போது, பனிப்படலத்தின் வெள்ளை மேற்பரப்பு ஒரு கண்ணாடி போல் செயல்பட்டு, சூரிய ஒளியை பிரதிபலித்து விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது. இதனால், பூமியின் தட்பவெப்பம் கட்டுபடுத்தபடுகிறதாம். இல்லையெனில் பூமி இன்னும் சூடாக இருந்திருக்குமாம்.

    - நியாண்டர் செல்வன்

    • ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்” என்றார்.
    • அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.

    இன்னும் சற்று நேரத்தில் சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை. உடன் இருக்கும் கைதி ஒரு பாடலை இனிமையாகப் பாடத் தொடங்கினான். கருத்தாழமிக்க அப்பாடலை தனக்காக மீண்டும் ஒருமுறை பாடச் சொன்னார் சாக்ரடீஸ்.

    அவன், "நீயோ சற்று நேரத்தில் பரிதாபமாக சாகப் போகிறாய்! உனக்கு பாடல் ஒரு கேடா? தெரியாமல் தான் கேட்கிறேன், உனக்கு எந்த விதத்தில் இது பயன்படப் போகிறது? நீ வாழப் போகிறவன் என்றால் கூட நான் மீண்டும் பாடிக்காட்டினால் நீ அதை பாடி பிறர் கேட்டால் உனக்கும் எனக்கும் பெருமை. சாகப்போகிற உனக்கு இது எதற்கு?" என்று கிண்டலும் கேலியும் செய்தான்.

    அமைதியாக சாக்ரடீஸ் கூறினார், "இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவேன் என்பது எனக்குத் தெரியும். இறப்பதற்குள் இந்த ஒரு புதிய செய்தியை நான் கற்றுக் கொள்வதன் வாயிலாக இன்னும் சிறிதளவு கூடுதலாக அறிவு எனக்கு ஏற்படுமே அதனால்தான்" என்றார்.

    அதற்கு முந்தைய நாள் மாய்ந்து மாய்ந்து படித்துக்கொண்டிருந்தார் ஒரு புத்தகத்தை. நீங்கள் தான் நாளை இறந்து விடப் போகிறீர்களே எதற்காக இப்படி விழுந்து விழுந்து படிக்கிறீர்கள் என்று சிறைக்காவலர் கேட்டதற்கு "ஆம் நாளைக்குள் படித்துவிட வேண்டுமே இல்லாவிட்டால் நான் செத்துப் போனால் இந்த நூலை மீண்டும் படிக்க முடியாது அல்லவா?" என்றாராம். அறிவுலக மேதையின் அறிவுத்தாகம் அறியும்போது நம் அறியாமையைப் போக்கிக் கொள்ளும் அறிவும் பெறலாமே.

    -கவிதா

    • பலர் கூடிநின்று கொடுக்கும் வழக்கத்தால் அது 'மொய்' என்றும் சொல்லப்பட்டது.
    • இலவயம் என்பது 'இலைவயம்' என்னும் வழக்கத்தின் வழியே தோன்றிய சொல்லாகும்.

    இன்று இலவசம் என்கிறோமே ,அது எப்படி வந்தது தெரியுமா? இலவயம் என்ற சொல்லில் இருந்து தான் வந்தது. இலவயம் என்பது 'இலைவயம்' என்னும் வழக்கத்தின் வழியே தோன்றிய சொல்லாகும்.

    திருமணம், பூப்பு நீராட்டு முதலிய மங்கல விழாக்களில் கலந்து கொள்பவர்கள், விழா நடத்தும் வீட்டாருக்கு இலை(வெற்றிலை)யில் காசு வைத்து வழங்குவார்கள். அது இலைவயம் எனப்பட்டது. பலர் கூடிநின்று கொடுக்கும் வழக்கத்தால் அது 'மொய்' என்றும் சொல்லப்பட்டது.

    இலைவயம் வழங்கிய தொகை மீளத் தருவதை எதிர் பார்க்காமல் கொடுத்த கொடை ஆதலால், அப்படிப் பட்ட கொடை 'இலவசம்' ஆகிவிட்டது. பின்னே 'இனாம்' என்பதும் வந்து விட்டது.

    -முது முனைவர் இளங்குமரனார்

    • நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.
    • நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    அறிவு, நீதியைச் சார்ந்து தெய்வத் தன்மையோடு விளங்குவது.

    ஆசை, அநீதியைச் சார்ந்து விலங்குத் தன்மையோடு இருப்பது.

    அறிவு இருக்கின்ற இடத்தில் அன்பு விளங்கும்.

    ஆசை இருக்கின்ற இடத்தில் வஞ்சகம் இருக்கும்.

    நீதிக்கும் அநீதிக்கும் நடக்கின்ற போர் எப்போதும் ஓயாது இருக்கும்.

    அறிவு விஞ்சுகின்ற போது தெய்வத் தன்மை விளங்கும்.

    ஆசை விஞ்சுகின்ற போது விலங்குத் தன்மை இருக்கும்.

    நாம் தெருவிலே நடந்து போய்கொண்டு இருக்கின்ற போது ஒரு பையைக் காண்போம். பையிலே உள்ளதை அறிந்து கொள்ள ஆசை மேலிடும். அதிலே நிச்சயம் பணம் அல்லது பணமதிப்பு உள்ள பொருள் காணப்படும்.

    இப்போது ஆசைக்கும் அறிவுக்கும் இடையே போர் மூளும்.

    இது யாரோ உழைத்துச் சேர்த்த பொருள். இதை இழந்தவர் வருத்தப்படுவார். இதற்கு உரியவர் யார் என்று அறிந்து அவரிடம் சேர்த்து விடவேண்டும் என்று அறிவு சொல்லும். பையைத் துழாவிப் பார்த்தால் ஒரு முகவரி இருக்கும். மனம் நிம்மதி அடையும்.

    ஆனால், ஆசை விடாது தனது போர்க்குணத்தைக் காட்டும். அந்தப் பை கிடைத்தது தமது அதிருஷ்டம் என்று வியக்கும்.

    இந்தப் போராட்டத்தில் வெற்றி கொள்வது அறிவாக இருந்தால் நீதி தழைக்கும். ஆசையாக இருந்தால் அநீதி தாண்டவம் ஆடும்.

    நீதியை மறைக்கும் குற்றங்கள் இரண்டு.

    ஒன்று அறியாமை, மற்றொன்று வஞ்சகம்.

    அறியாமை பாவம் அல்ல. அறியாமை என்பது நீக்கிக் கொள்ளக் கூடிய குற்றம் ஆகிறது.

    ஆனால், வஞ்சகம் பெரும் குற்றம் ஆகும். அது நரகத்துக்கு வித்தாக அமைகிறது.

    வழியில் கண்டு எடுத்த பொருளை உரியவரிடம் ஒப்படைப்பதே நீதி என்று அறிவு சொல்லுகின்றது.

    வஞ்சகம் அந்த அறிவை மழுங்கச் செய்கிறது. வஞ்சகம் ஒரு கணத்தில் மனதைத் தன் வசப்படுத்திவிடும்.

    நாம் அதனைச் சிறை செய்து அறிவினிடம் ஒப்புவிக்க வேண்டும்.

    நீதியின் வடிவாக உள்ளவன் இறைவன்.

    நீதியோடு சம்பந்தப்பட்டவன் இறைவனோடு சம்பந்தப்பட்டவன் ஆகிறான்.

    -பி.டி.அரசு

    • கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன.
    • மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா.

    டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தன. அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய "காப்பாற்றுங்கள்" என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

    அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலுக்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.

    மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக்கில் இருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.

    • மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும்.
    • பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது.

    வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது.

    இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள். வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.

    இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் புத்துணர்வை உண்டாக்கும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

    வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து 200 மில்லி கிராம் முதல் 400 மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை 30 மில்லி முதல் 65 மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.

    மண்பானைத் தண்ணீருடன் வெட்டிவேர் சேர்த்தால் கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். மேலும் நறுமணம் வீசும் இந்த நீரை குடிப்பதால் உடல்சூடு குறையும்.

    -மரிய பெல்சின்

    ×