என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anandhi"

    • கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'யூகி'.
    • 'யூகி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

     

    யூகி

    யூகி

    தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'யூகி' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    யூகி திரைப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • ’கயல்’ ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் ‘மங்கை’.
    • இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கியுள்ளார்.

    கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. இவர் தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'மங்கை' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. #PariyerumPerumal
    ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.

    இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை - 2 படத்தை இயக்கியவர்)

    இந்தப்படத்திற்கு இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரேயா (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறார்.



    இவரை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒட்டி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார். கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். 

    விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது. 
    தினேஷ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு திரைப்படம் திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்திருக்கிறது. #Irandaam_Ulagaporin_Kadaisi_Gundu
    "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு".

    நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.



    சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர்.

    "திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்று கூறினார் இயக்குநர் அதியன் ஆதிரை.
    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கமாண்டோ படை வீரர்கள் சுற்றி வளைத்திருக்கிறார்கள். #Dinesh #Gundu
    நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். நீலம் புரொடக்சன் சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம், மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தனர். 

    நாயகன் தினேஷ், வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சியை படக்குழுவினர் படமாக்கிக் கொண்டிருந்தனர். கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுற்றி வளைத்துப் பிடித்தனர். 



    இதை அறிந்திராத தினேஷ், 'நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே' இது சீன்லயே இல்லையே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு? என்று கேட்க.... நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார். நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர். 
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். 

    படத்தை பார்த்த கமல், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். 

    இருப்பினும் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வந்ததால் சில நாட்களிலேயே பல தியேட்டர்களில் அதிக காட்சிகள் போடப்பட்டது. பல ஊர்களிலும் வெளியானது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



    கோவாவில் நடைபெறும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
    பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், அவர் படம் பார்க்கும் வரை எனக்கு பதற்றம் இருக்கும் என்று கூறினார். #PariyerumPerumal #MariSelvaraj
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  

    இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, ‘பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். 

    என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். 



    பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்’ என்றார்.
    அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள் என்று பரியேறும் பெருமாள் நன்றி தெரிவிக்கும் விழாவில் பா.ரஞ்சித் பேசியுள்ளார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  



    தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.
    கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மக்கள் பாராட்டுவதை அறிந்த விஜய், அவரை நெகிழ வைத்து பாராட்டி இருக்கிறார். #Kathir #Vijay
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார்.

    இது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.



    அப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிகிட்டு இருக்காங்க. நல்லா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும் போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ரொம்ப பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுகிறார்கள் என்றால் மிகப்பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை கொண்டாடு. இன்னும் நான் படம் பார்க்கவில்லை. சீக்கரமே பார்த்துட்டு கூப்பிடுறேன் என்று என்னிடம் சொன்னார். விஜய் சொன்னவுடனே ஒட்டுமொத்த ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது'' என்றார்.
    ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்று விட்டது, காட்சிகள் உயரும் என்று பிரபல தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். #PariyerumPerumal
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    கடந்த வாரம் செக்கச் சிவந்த வானம் வெளியானதால், பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு குறைத்தளவு தியேட்டர்களே கிடைத்தது. இருந்தாலும் இப்படத்திற்கு மக்கள் அதிக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் தியேட்டர் குறைவாக இருப்பதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லையும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.



    இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பெரும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மிக்க நன்றி!! நீங்கள் தரும் ஆதரவுக்கு ஏற்ற திரையரங்க காட்சிகள் உயர்த்துவதற்கு முயற்சித்து கொண்டிருக்கிறோம்.. ஏற்றம் வரும் காத்திருப்போம்!!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  கவனத்துக்கு’ என்று பதிவு செய்திருந்தார்.

    இதற்கு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘தமிழ்திரை வரலாற்றில் ஒரு திரைப்படத்திற்கு மக்கள் ஆதரவே காட்சிகள் அதிகரிப்பை உறுதி செய்திருக்கிறது. இதில் சங்கங்களின் தலையீடு எப்பொழுதும் இருந்ததில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவமும் கூட (அருவி, மாநகரம்). மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்றுவிட்டது! காட்சிகள் உயரும்!’ என்று கூறியிருக்கிறார்.
    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #PariyerumPerumal
    நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்ப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

    சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசரை ஜூன் 4 (நாளை) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.



    ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற ‘கருப்பி...’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். #PariyerumPerumal
    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #PaRanjith #PariyerumPerumal
    பா.இரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’,  ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இதுதவிர, பா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் ‘கருப்பி...’ பாடலை வெளியிட்டார்கள். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது இரண்டாவது பாடலான ‘எங்கும் புகழ் துவங்க...’ என்ற பாடலை மே 18ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதனை பா.இரஞ்சித், சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

    இயக்குனர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌சன்ஸ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்து வருகிறது. இயக்குனர் ராமின் இணை இயக்குனரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



    இதில் கதிர் நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும், யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    ×