என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apollo Doctor"

    மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே ஜெயலலிதாவுக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறிய அவர் பதவி ஏற்றபோது நடந்து வந்த வீடியோவை காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரேமான்ட் டோமினிக் சேவியோ, இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் கார்த்திகேசன் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகி இருந்தனர்.

    மருத்துவர் ரேமான்ட் தனது சாட்சியத்தில், ‘22.9.2016 அன்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, நான் உடன் சென்றேன். ஓரளவுக்கு நினைவுடன் இருந்த போதிலும் ஜெயலலிதா அந்த சமயத்தில் பேசும் நிலையில் இல்லை’ என்று கூறினார்.

    இதையடுத்து, 23.5.2016 அன்று ஜெயலலிதா முதல்- அமைச்சராக பதவி ஏற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி மருத்துவர் ரேமான்டுக்கு ஆணையத்தின் மூலம் காண்பிக்கப்பட்டது.

    அந்த வீடியோவை பார்த்து முடித்த பின்பு ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘இந்த வீடியோவை பார்க்கும்போது ஜெயலலிதா மெதுவாக நடந்து வருகிறார். ஒருவர் நடந்து வருவதை பார்த்து அவருக்கு இருக்கும் நோயை கண்டறியும் தேர்வு மருத்துவ படிப்பில் உள்ளது. ஜெயலலிதா குனிந்தபடி மெதுவாக நடந்து வருவதன் மூலம் அவருக்கு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என்பதை கண்டறிய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் ரேமான்ட், அப்போதே ஜெயலலிதாவுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.



    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவருக்கு நோய் பாதிப்பு இருந்ததா? என்பதை கண்டறியவும், அவ்வாறு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், ஏன் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது குறித்தும் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

    மருத்துவர் கார்த்திகேசன் அளித்த சாட்சியத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று அவரது இதய துடிப்பை பரிசோதித்தேன். இதய துடிப்பு சரியாக இருந்தது. இதன்பின்னர் சீராக இல்லாத காரணத்தினால் பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது’ என்று கூறினார். #Jayalalithaa #ArumugasamyCommission
    ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்றும், மயக்கநிலையிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பல்லோ மருத்துவர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். #JayaDeathProbe #ApolloDoctor
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் சினேகாஸ்ரீ நேற்று ஆஜரானார்.

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, ஆம்புலன்சில் சினேகாஸ்ரீ மருத்துவராக இருந்துள்ளார். அந்த அடிப்படையில் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தகவல் அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்சில் நானும் சென்றேன்.

    போயஸ் கார்டனில் ஒரு நாற்காலியில் மயக்கநிலையில் ஜெயலலிதா அமர வைக்கப்பட்டிருந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை.

    இதன்பின்பு, போயஸ்கார்டன் பணியாளர்கள் மூலம் ஜெயலலிதாவை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது ஆம்புலன்சில் சசிகலா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் உடன் வந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ஜெயலலிதா மயக்கநிலையிலேயே இருந்தார்.

    இருதயத்துடிப்பு சீராக அவருக்கு மருத்துவமனையில் ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல் தவறானது.

    மேற்கண்டவாறு மருத்துவர் சினேகாஸ்ரீ தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

    அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, ‘நான் எங்கு இருக்கிறேன்’ என்று ஜெயலலிதா தன்னிடம் கேட்டதாக சசிகலா ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். ஆம்புலன்சில் உடன் சென்ற மருத்துவரான சினேகாஸ்ரீ, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை மயக்கநிலையிலேயே இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. #JayaDeathProbe #ApolloDoctor

    ×