search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Buffalo cow"

    • எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று திடீரென பொது மக்களை விரட்டி, விரட்டி முட்டிதள்ளியது.

    இதில் அதே பகுதி அம்சா தோட்டம், 2-வது தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மதுமதி (33) என்பவரையும் எருமை மாடு முட்டி தூக்கியது. அப்போது மாட்டின் கொம்பில் சேலை சிக்கிக் கொண்டதால் மது மதியை தரதரவென சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மாடு இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது.

    எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மதுமதியின் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் பெரிதானது. மேலும் தொடர்ந்து காயம் அதிகரித்ததால் தற்போது மதுமதியின் காலில் புண் இருந்த இடம் அழுக தொடங்கி இருக்கிறது. அதில் அறுவை சிசிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர். மதுமதிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் உதவி செய்யவேண்டும் என்று மதுமதியின் கணவர் வினோத் கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார்.

    வேன்டிரைவராக வேலைபார்த்து வரும் வினோத் மனைவியை கவனித்து வருவதால் அவரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாடு முட்டியதில் காயம் அடைந்த மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் உள்ள காயம் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இதுவரை ரூ.1 லட்சத்துக்கும்மேல் செலவு செய்து விட்டேன். என்னிடம் மேலும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மதுமதி சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, மாட்டின் கொம்பு மதுமதியின் காலில் குத்தி கிழித்து உள்ளது. இதனால் அவரது காலில் 12 செ.மீட்டர் அளவுக்கு சதை கிழிந்தது. அந்த இடத்தில் சதை அழுகி சேதம் அடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். காலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது என்றார்.

    ×