என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai beach to chengalpattu electric train"

    • இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
    • இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணிக்கும் புறநகர் ரெயில் சேவைகள் உள்ளது. இதைத்தவிர கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரெயில்கள் செல்கின்றன.

    இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இந்த புறநகர் ரெயில்கள் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டது.

    இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் இந்த குளு, குளு ஏ.சி ரெயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவிக்க இருக்கிறது.

    மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல நாள் முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படாது. காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.

    இந்த ரெயிலை பொறுத்தவரை கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.

    இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.

    இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. பயணிகள் மத்தியில் குளு, குளு ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயும் ஏ.சி. ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கிய பாஸ்ட் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்ட பிறகு விபத்து குறைந்துள்ளதை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது. #TrainAccident
    சென்னை:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழைந்தபோது படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பயணிகள் 5 பேர் உடல் சிதறி கடந்த மாதம் 24-ந்தேதி பலியானார்கள். இந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

    கடற்கரை- திருமால்பூர் வரை சென்ற பாஸ்ட் மின்சார ரெயிலில் பயணம் செய்த வாலிபர்கள் தான் விபத்தில் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் பாதையில் ‘பாஸ்ட்’ மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 10 நாட்களாக மின்சார ரெயில் பாதையில் மட்டுமே அனைத்து மின்சார ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பொது மக்களிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்.

    பரங்கிமலை ரெயில் விபத்துக்கு பிறகு எல்லா மின்சார ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை, மாலை பீக்அவர்சில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்கின்ற நிலை காணப்படுகிறது.

    தற்போது பாஸ்ட் மின்சார ரெயில்கள் சாதாரண ரெயிலாக இயக்கப்படுவதால் மற்ற மின்சார ரெயிலை போல அனைத்து நிலையங்களிலும் நின்று செல்கிறது.

    தினமும் 7 பாஸ்ட் மின்சார ரெயில்கள் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. அந்த ரெயில்கள் இப்போது எல்லா நிலையங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    அதே நேரத்தில் செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற நீண்ட தூரத்தில் இருந்து வரும் பயணிகள் வேகமாக செல்ல முடியாததால் ஆத்திரம் அடைகின்றனர்.

    பாஸ்ட் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சாதாரண ரெயிலாக மாற்றப்பட்டதால் தற்போது பீக் அவர்சில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படுகிறது.

    மேலும் எல்லா நிலையங்களிலும் அனைத்து மின்சார ரெயில்களும் நின்று செல்வதால் பயணிகள் பதட்டம் அடையாமல் நிதானமாக பயணம் செய்கிறார்கள்.

    இதனால் விபத்து குறைந்துள்ளது. பரங்கிமலை விபத்துக்கு பிறகு மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

    பாஸ்ட் மின்சார ரெயில் தாம்பரம், கிண்டி, மாம்பலம் போன்ற நிலையங்களில் மட்டும் தான் நின்று சென்றது. இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்லக் கூடியவர்கள் அதில் இருந்து இறங்கி மற்றொரு மின்சார ரெயிலில் பயணம் செய்ய தண்டவாளத்தை கடப்பார்கள். அப்போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறும்.

    ஆனால் பாஸ்ட் மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்ட பிறகு விபத்து குறைந்துள்ளதை ரெயில்வே நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது.

    அதனால் இனி எக்ஸ்பிரஸ் பாதையில் பாஸ்ட் சர்வீசை முழுமையாக ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.  #TrainAccident
    ×