என் மலர்
நீங்கள் தேடியது "JDS"
- கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை.
- எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும்.
பெங்களூரு :
பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். எந்த நெருக்கடியாக இருந்தாலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜனதாதளம் (எஸ்) கட்சி போராடி வருகிறது.
எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் விரும்பியபடி ஆட்சி செய்வோம். மக்கள் விரும்பியபடி ஆட்சி கொடுக்காவிட்டால், ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைத்து விடுவேன். ஜனதாதளம் (எஸ்) கட்சி 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பிரபலமானது, குமாரசாமி செல்லும் பகுதிகளில் மக்கள் கூடுவார்கள், ஆனால் மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இது மாற வேண்டும்.
கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. எந்த தொகுதியில் யார் சென்றாலும், சாதாரண தொண்டரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறும் சக்தி கட்சிக்கு உள்ளது. சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜனதா அரசு கூறி வருகிறது. எனக்கு இருக்கும் தகவல்படி அவர் உடுப்பியில் இருந்து கேரளா, அங்கிருந்து புனேக்கு சென்றிருந்தார். புனேயில் இருந்து குஜராத்திற்கு எப்படி சென்றார்?, அவரை அங்கு அழைத்து சென்றது யார்? என்பது தெரியவில்லை.
3 நாட்களுக்கு முன்பாகவே சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த சாட்சிகள் அனைத்தையும் போலீசார் அழித்து விட்டனர். சான்ட்ரோ ரவி கைதாகும் முன்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எதற்காக குஜராத் சென்றார். சான்ட்ரோ ரவியை குஜராத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?. அங்கு பா.ஜனதா அரசு உள்ளது. அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாட்சி, ஆதாரங்களை அழித்த பின்பு சான்ட்ரோ ரவி கைதாகி எந்த பிரயோஜனமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
- தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.
மண்டியா :
மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.
பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
- ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார்.
- எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை.
பெங்களூரு :
பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைக்க போவதாக குமாரசாமி கூறி இருக்கிறார். குமாரசாமியின் இந்த பேச்சால், அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவ்வாறு குழப்பத்தில் இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் காங்கிரசில் சேரலாம். அந்த கட்சி தொண்டர்களுக்கு நானே அழைப்பு விடுக்கிறேன்.
எனது கனகபுரா தொகுதியில் இருந்து மாநிலம் முழுவதும் பல தொகுதிகளில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருப்பவர்கள் காங்கிரசில் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி மீது நான் எந்த குற்றச்சாட்டும் கூறுவதில்லை, அந்த கட்சியின் தலைவர்களுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக கூறுவது உண்மை இல்லை.
ஏனெனில் சமீபமாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் எந்த மாதிரியான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது குமாரசாமிக்கு தெரியவில்லை. குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை கலைப்பதாக தனது வாயால் சொல்லி முடித்து விட்டார். அந்த கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாது என்று நான் சொல்லவில்லை.
அந்த கட்சி தலைவர்கள் ஒரு மாதிரியான கொள்கையின் அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். அரசியலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இருக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சி மற்றும் என்னுடைய நிலைப்பாடு ஆகும். ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் மென்மை போக்கை கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்காக, தினமும் காலையில் எழுந்தவுடன், அந்த கட்சி தலைவர்களுடன் என்னால் சண்டை போட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நேற்று மதியம் கலபுரகி விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பாத்திரம் இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர். முதல்-மந்திரியும் கூறி வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு கைதான நபர்கள், ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பெரிய முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது.
அரசு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் ஆதரவு இல்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களுக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியமே இல்லை. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் அரசின் பங்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி. இதனை மூடி மறைக்கவே போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது, என்றார்.
- எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள்.
- நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது.
ராய்ச்சூர் :
ராய்ச்சூரில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
ஜனதாதளம் (எஸ்) கட்சி கலைக்கப்பட இருப்பதாகவும், குழப்பத்தில் இருக்கும் தொண்டர்கள் காங்கிரசில் சேரலாம் என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியை அழிக்க காங்கிரஸ் தலைவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். எங்கள் கட்சியை தேசிய அளவுக்கு மக்கள் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, எங்கள் கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். எங்களது கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன். நாட்டில் தற்போது காங்கிரஸ் கட்சி காணாமல் போய் வருகிறது. கர்நாடகத்தில் மட்டும் 60, 70 தொகுதிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள்.
எங்கள் கட்சியை அழிக்க நினைத்தால், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை என்று மக்களை ஏமாற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டு இருந்தால், சட்டசபை தேர்தலில் கூடுதலாக 4 தொகுதிகள் கிடைக்கும். ஜனதாதளம் (எஸ்) கட்சி பற்றி பேசினால், காங்கிரசுக்கு அந்த தொகுதிகளிலும் கிடைக்காமல் போய் விடும்.
பவானி ரேவண்ணா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், எனது மகன் போட்டியிடுவது குறித்தும் ஈசுவரப்பா பேசி இருக்கிறார். எனது மகன் மட்டும் தான் தேர்தலில் போட்டியிடுகிறாரா?. சித்தராமையா தனது மகனை எம்.எல்.ஏ. ஆக்கவில்லையா?. ஈசுவரப்பா, எடியூரப்பா தங்களது மகன்களை எம்.எல்.ஏ.க்கள் ஆக்க மறைமுக முயற்சி செய்யவில்லையா?. ஜனதாதளம் (எஸ்) கட்சி விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
- ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
- சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
உப்பள்ளி :
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹாசன் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தேவேகவுடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா தனது மனைவி பவானிக்கு ஹாசன் தொகுதியில் டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் தேவேகவுடாவின் மற்றொரு மகன் எச்.டி.குமாரசாமி தனது ஆதரவாளரான ஸ்வரூப் என்பவருக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அக்கட்சிக்குள் பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் உப்பள்ளியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.டி.குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசனில் வலுவான கட்சி நிர்வாகிகள் உள்ளனர். ஹாசன் தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். அது தான் இறுதி முடிவு. நான் அந்த தொகுதியின் யதார்த்தத்தை பற்றி அறிந்துள்ளேன். பவானி ரேவண்ணா ஹாசனில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது.
நான் நடத்திய கள ஆய்வில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சாதாரண கட்சி தொண்டருக்கு ஹாசனில் டிக்கெட் கொடுக்கும்படி கூறி வருகிறேன். சில சகுனிகள் தேவகவுடா குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தான் ஹாசன் தொகுதி விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விதவை பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படும். 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான பொருளாதாரத்தில் நலவுற்ற மாணவர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
நிமான்ஸ் ஆஸ்பத்திரி போல் 500 படுக்கைகளை கொண்ட நரம்பியல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களுக்கு முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். 6 ஆயிரத்து 6 கிராம பஞ்சாயத்துகளில் தலா 30 படுக்கைகளுடன் கூடிய உயர்தர ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி, இளம் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை, விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் மத சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பட்ஜெட்டில் 5 சதவீத நிதி ஒதுக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் மானியம், சிறு தொழில் தொடங்குவோருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
போலீசாரின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும். புதிதாக வக்கீல் தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட காவலாளிகளுக்கு மாதம் ரூ.2,000, பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும். முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ள மேகதாது திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
- காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை.
மங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. நேற்று முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கடலோர மாவட்டமான உடுப்பியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் உடுப்பியில் திறந்த வாகனத்தில் 'ரோடு ஷோ' நடத்தினார். சாலையின் இருப்புறங்களிலும் ஏராளமானோர் திரண்டு அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடந்த பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:
கர்நாடகத்தில் வருகிற 10-ந்தேதி நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள், காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசுக்கு பதிலாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து இரட்டை என்ஜின் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்துக்கு ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 418 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு கர்நாடகத்துக்கு ரூ.99 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கியது.
காங்கிரசின் 'ரிவர்ஸ் கியர்' அரசு கர்நாடகத்தை அவர்களின் ஏ.டி.எம்.மாக பயன்படுத்தியது. செழிப்பு, வளர்ச்சி மற்றும் அமைதியை உறுதிப்படுத்த பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக ஆட்சியில் பி.எப்.ஐ. அமைப்பை ஆதரித்த காங்கிரசை மக்கள் நம்ப வேண்டாம். பா.ஜனதா அரசு அந்த அமைப்பை தடை செய்து, அதன் தலைவர்களை சிறையில் தள்ளியது. பா.ஜனதாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை பயங்கரவாத செயல்களுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது. அதேநேரத்தில் காங்கிரஸ் தங்கள் ஆட்சியின்போது சமூகத்தை பிளவுப்படுத்த முயன்றது.
காங்கிரஸ் வெளியிட்ட உத்தரவாத அட்டை கர்நாடகத்தில் வேலை செய்யாது. காங்கிரசின் பிழைப்புக்கே உத்தரவாதம் இல்லை. இதில் அவர்களின் ஆட்சிக்கு உத்தரவாத அட்டையை யார் நம்புவார்கள், ஊழல், சமாதான அரசியல், குடும்ப ஆட்சி மட்டுமே காங்கிரசின் உத்தரவாதங்கள்.
அசாம், திரிபுரா, மணிப்பூர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் காலத்தில் வெளியிட்ட காங்கிரஸ் உத்தரவாத திட்டங்களை மக்கள் நிராகரித்து விட்டனர். கர்நாடக மக்களும் இதை பின்பற்றுவார்கள்.
பா.ஜனதா அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. லிங்காயத், ஒக்கலிகர், ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளது. அம்பேத்கர் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை.
மாநில மக்கள் கட்சியான ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஜனதாதளம்(எஸ்) கட்சி காங்கிரசின் பி 'டீம்'. அவர்களுக்கு வாக்களிப்பது, காங்கிரசுக்கு வாக்களிப்பது போன்றதாகும். 2023-ம் ஆண்டு பா.ஜனதாவுக்கு வாக்களிப்பது இரட்டை என்ஜின் ஆட்சி மூலம் கர்நாடகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த வெற்றி 2024-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு அடித்தளமிடும்
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதாவுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்
- கட்சியை ஒழுங்கமைக்க குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்
எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் எங்களை எதிர்க்கட்சிகளின் ஒரு அங்கமாக நினைக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் பா.ஜனதாவுடன் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்களும், பா.ஜனதாவும் எதிர்க்கட்சிகள் என்பதை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். தற்போது நாங்கள் மாநில நலனுக்காக இணைந்து செயல்பட இருக்கிறோம். இன்று காலையில் (நேற்று) கூட எங்களுடைய எம்.எல்.ஏ.-க்கள் இதை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து விவாதித்தோம்'' என்றார்.
மேலும், தேவகவுடா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைவர்களின் கருத்துகளை கேட்டபிறகு, 31 மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கவும், கட்சியை ஒழுங்கமைக்கவும் அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டீர்களா? என்ற கேள்விக்கு,
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. தேர்தல் வரும்போது பார்க்கலாம். தற்போது கட்சியை ஒழுங்கமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்க தேவகவுடா எனக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநில எம்.எல்.ஏ. தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 135 இடங்களிலும், பா.ஜனதா 66 இடங்களிலும் வெற்றி பெற்றன.
- கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
- வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும் என்றார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் கட்சி தனித்தே போட்டியிடும்.
எங்கள் கட்சியினருடன் கலந்தாலோசித்த பின்னர் கட்சி வலுவாக உள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.
குமாரசாமியின் கருத்துக்கு நேர்மாறாக தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கூட்டணி குறித்து பேசிய தேவகவுடா, தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார்.
- மத்திய மந்திரி அமித் ஷா ஜனதா தளம் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்கி இருப்பதாக தகவல்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.
ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் ஜனதா தளம் கட்சி நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
"பா.ஜ.க. மற்றும் ஜனதா தளம் கட்சி இடையே ஒற்றுமை இருக்கும். மத்திய மந்திரி அமித் ஷா ஜனதா தளம் கட்சிக்கு நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்து இருக்கிறார்," என்று பி.எஸ். எடியூரப்பா தெரிவித்து உள்ளார். ஜூன் 1996 முதல் ஏப்ரல் 1997 வரை இந்திய பிரதமராக இருந்துவந்த ஹெச்.டி. தேவகவுடா கர்நாடக மாநிலத்தில் ஐந்து தொகுதிகளை ஒதுக்கும் படி கேட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மண்டியா, ஹசன், தும்குரு, சிக்பெல்லாபூர் மற்றும் பெங்களூரு புறநகர் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. எனினும், பேச்சுவார்த்தைக்கு பிறகு நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜனதா தளம் ஒப்புக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக ஜூலை மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசிய தேவகவுடா, தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்து இருந்தார். "நாங்கள் ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்," என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தான் தற்போது பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி உருவாகி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- கர்நாடகாவில் பாஜக- மதசார்பற்ற ஜனதா தளம் இடையிலான கூட்டணி உறுதியாகியுள்ளது.
- தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.
பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. இதனால் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.
அதேவேளையில் பா.ஜனதா கூட்டணியிலும் ஏராளமான மாநில கட்சிகள் உள்ளன. பல மாநிலங்களில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கூட்டணியாகவும் களம் இறங்க இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடா வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து போட்டியிடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேவகவுடா கூறுகையில் "மதசார்பற்ற ஜனதா தளம், பா.ஜனதா ஆகியவை இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் நாங்கள் இணைந்து போட்டியிடுவோம். தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெச்.டி. குமாரசாமி உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளன. ஆனால் தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை.
சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்து. இதனால் தேவகவுடா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும் நினைக்கிறது.
குமாரசாமியின் ஆட்சி கவிழ காங்கிரஸ் முக்கிய காரணமாக இருந்தது. இதனால் பா.ஜனதா துணையுடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என குாமாரசாமி விரும்புவார்.
- பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றார்.
- ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், ம.ஜ.த. முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்தது. இதற்கிடையே ஜெர்மனியில் இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவரை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையே கடந்த 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அங்குள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்தனர். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான மகளிர் போலீஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர். 35 நாட்களாக வெளிநாட்டில் இருந்த அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணை குழு போலீசார் காரில் சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன் பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க சிறப்பு விசாரணை குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரஜ்வல் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அவரது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவகவுடா கடும் எச்சரிக்கை விடுத்தார்.
தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம். நாடு திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜாமீனில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் போட்டியிட்டார். அந்த தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
#WATCH | Karnataka: Suspended JD(S) leader Prajwal Revanna, who is facing sexual abuse charges was brought to the CID office, in Bengaluru. He has been arrested by SIT and is likely to be brought to the government hospital for medical examination. pic.twitter.com/ndKZghNpvD
— ANI (@ANI) May 30, 2024